ஊசி போட்டால் HIV பரவுமா? ஒரே சிரஞ்சையா? பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் 331 குழந்தைகள் நிலை?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் நேர்ந்த மிகப்பெரிய மருத்துவக் குளறுபடி, உலகையே அதிரச் செய்துள்ளது. தவுன்சா (Taunsa) நகரில் உள்ள தாலுகா தலைமையக (THQ) அரசு மருத்துவமனையில், ஊழியர்களின் கடும் அலட்சியத்தால் சுமார் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று பரவியிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒருமுறை பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதே இந்த கொடூரமான விளைவுக்குக் காரணம் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிபிசி நிறுவனம் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுமார் 32 மணி நேரத்திற்கும் மேலாக ரகசியமாக வீடியோ பதிவு செய்து ஆய்வு நடத்தியது. அந்த வீடியோவில், மருத்துவமனை ஊழியர்கள் அடிப்படை சுகாதார விதிகளைச் சற்றும் மதிக்காமல் செயல்படுவது பதிவாகியுள்ளது.

331 குழந்தைகள்
குறிப்பாக, ஒரு குழந்தைக்குப் பயன்படுத்திய அதே ஊசியை மற்றொரு குழந்தைக்குப் பயன்படுத்துவதும், மருத்துவ உபகரணங்களை சரியாகச் சுத்திகரிக்காமல் கையாளுவதும் அம்பலமானது. ஊசி செலுத்தும் போது ஊழியர்கள் கிளவுஸ் கூட அணியாமல் அலட்சியமாகச் செயல்பட்டது அந்த ரகசியக் கேமராவில் பதிவாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அல்தாஃப் அகமது இதுகுறித்து சொல்லும்போது, "ஊசியின் முனையை மட்டும் மாற்றினால் போதாது, அதன் அடிப்பகுதியான பேரல் (Barrel) வழியாகவும் வைரஸ்கள் எளிதாகப் பரவக்கூடும். முழு சிரிஞ்சையும் மாற்றாமல் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தானது" என்று எச்சரித்துள்ளார்.
வெளிச்சத்திற்கு வந்த கொடுமை
முகமது அமீன் என்ற 8 வயது சிறுவனின் மரணமே இந்த முறைகேட்டை உலகிற்குத் தெரியப்படுத்தியது. சாதாரண சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற அந்தச் சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.
இதனைத் தொடர்ந்து அவனது சகோதரி அஸ்மாவிற்கும் பரிசோதனை செய்ததில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனது பிள்ளைகளுக்கு மருத்துவமனையில் போடப்பட்ட அசுத்தமான ஊசிகளால்தான் இந்த நிலை ஏற்பட்டதாக அவர்களது பெற்றோர் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்ளூர் மருத்துவர் குல் கைஸ் ரானி என்பவர், தனது கிளினிக்கிற்கு வரும் குழந்தைகளிடையே எச்.ஐ.வி பாதிப்பு திடீரென அதிகரிப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட மாகாண அளவிலான பரிசோதனையில், நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும் 331 குழந்தைகள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
அதிகாரிகளின் மறுப்பும், தொடரும் விசாரணையும்
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் காசிம் புஸ்தார், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் போலியானவை என்றும், மருத்துவமனையின் பெயரைக் கெடுக்கச் சதி நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருந்தாலும் பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக லர்கானா பகுதியில் ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் 900-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்ட வரலாறு உள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாகப் பஞ்சாப் மாகாண அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு தனித்தனியாக விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
பாதுகாப்பற்ற மருத்துவ நடைமுறைகள் மற்றும் முறையற்ற கிளினிக்குகள் காரணமாகப் பாகிஸ்தானில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாட்டின் மிக முக்கியமான அரசு மருத்துவமனையிலேயே இத்தகைய உயிர் பறிக்கும் அலட்சியம் அரங்கேறியுள்ளது அங்குள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications