இந்தியாவில் நடைபெறும் பலாத்காரங்கள் அச்சுறுத்துகின்றன- அமெரிக்கா குமுறல்
வாஷிங்டன்: இந்தியாவில் நடைபெற்றுவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சுறுத்துவதாக உள்ளது என்று அமெரிக்க துணை செய்தித்தொடர்பாளர் மேரி ஹாப் தெரிவித்தார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில் "பெண்களுக்கு எதிராக சமீபகாலமாக இந்தியாவில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் கொலைகள் அச்சுறுத்துவதாக உள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களின் கஷ்டங்களை நாங்கள் உணர்ந்துள்ளோம். சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதன் மூலமாகவும், பெண்களை ஆண்களுக்கு சமமாக மதிக்க கற்றுக்கொடுப்பதன் மூலமாகவும்தான் இந்த நிலையை மாற்ற முடியும். ஆனால் பாலியல் சமத்துவம் என்பது, இந்தியாவில் கஷ்டமான காரியம் என்பதை உணர்ந்துள்ளோம்.
அதே நேரத்தில், பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவர்களுக்கு சமூக குழுக்களும், அரசு அதிகாரிகளும், தனிப்பட்ட நபர்களும் உறுதுணையாக இருந்து அவர்களை காப்பாற்ற போராடுவதை பாராட்டுகிறோம் என்றார்.
அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் முன்னாள் தலைவர் ரோன் சோமர்ஸ் கூறுகையில், "இப்போதைய உடனடிதேவை சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். பெண்களுக்கு போதிய பாதுகாப்பை அளிக்க வேண்டியது இந்தியாவின் உடனடி தேவையாக உள்ளது. பலாத்கார சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் இப்போது அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன.
இதனால், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது. முதலீட்டாளர்களும், சுற்றுலா பயணிகளும் இந்தியா வர பயப்படுகிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகையால் நேரடியாகவும், சுற்றுலாவை நம்பிய தொழில்களால் மறைமுகமாகவும் இந்தியாவுக்கு அன்னிய செலவாணி அதிக அளவு கிடைத்துவருகிறது. பாலியல் பலாத்கார சம்பவங்களால் அந்த வருவாயில் பாதிப்பு ஏற்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications