இஸ்ரேலை நோக்கி அணிவகுத்த டிரோன்கள்.. ஹவுதிகள் தாக்குதல்! ஏர்போர்ட் சேதம்.. மத்திய கிழக்கில் பதற்றம்
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சிக்குழுவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருவதால் இஸ்ரேல் - ஹவுதி கிளர்ச்சிக்குழு இடையே மோதல் தீவிரமாக வெடித்துள்ளது. இந்த சூழலில் இன்று இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிக்குழு டிரோன்கள் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு போர் வெடித்தது. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வந்த நிலையில், இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு, இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்து சென்றனர்.

இஸ்ரேலின் தெற்கு விமான நிலையம் பாதிப்பு
இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல், "ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்காமல் ஓயமாட்டோம்" என்று தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.
பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஹவுதி குழு நடத்திய டிரோன் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்கு விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுத்தி வைப்பு
விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டதோடு, வான்வெளியும் மூடப்பட்டது. விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இது தொடர்பாக இஸ்ரேல் கூறியதாவது:- "ஹவுதி கிளர்ச்சி குழுவினர் டிரோன் தாக்குதலை நடத்தினர். இதில் பல டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. ஒரு டிரோன் ரமோன் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் ஹாலை தாக்கியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரமான எய்லாட் அருகே இந்த விமான நிலையம் உள்ளது.
முன்னதாக கடந்த மே மாதம் இஸ்ரேலின் பிரதான விமான நிலையம் அருகே ஹவுதி குழுக்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதலில் நான்கு பேர் காயம் அடைந்தனர். பல முன்னணி விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு பல மாதங்களாக விமான சேவையை நிறுத்தி வைத்தன. அதன்பிறகு ஏமன் தலைநகர் சானாவில் உள்ள முக்கிய விமான நிலையத்தை இஸ்ரேல் தகர்த்தது.
ஹவுதி கிளர்ச்சி குழுக்கள்
இவ்வாறு ஹவுதி கிளர்ச்சி குழுக்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இன்று திடீரென விமான நிலையத்தைக் குறிவைத்து டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளன. எனினும், இது தொடர்பாக ஹவுதிகள் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. வழக்கமாக இதுபோன்ற தாக்குதல்களுக்கு மிகவும் தாமதமாக பொறுப்பேற்பது ஹவுதிகளின் நடைமுறையாக உள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏமன் தலைநகர் சானாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஹவுதி அரசின் பிரதமர் கொல்லப்பட்டார். அவருடைய சகாக்கள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த ஹவுதிகள், "இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவோம்" என்று கூறியிருந்தனர். இத்தகைய சூழலில்தான் இன்றைய தாக்குதல் நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications