எபோலா பரவிய போதும் மாயமானார்.. கொரோனா காலத்திலும் காணவில்லை.. கிம் ஜோங்கிற்கு 2014ல் என்ன நடந்தது?
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தற்போது காணாமல் போய் இருப்பது போலவே இதற்கு முன் 2014 இதேபோல் காணாமல் போய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பியாங்யோங்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தற்போது காணாமல் போய் இருப்பது போலவே இதற்கு முன் 2014 இதேபோல் காணாமல் போய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இப்போது எங்கே இருக்கிறார் என்பதுதான் உலகம் முழுக்க பெரிய கேள்வியாக உள்ளது. ஒரு பக்கம் கொரோனா அச்சம் நிலவி வரும் போதும் கூட, கிம் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
அவரது உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது, அவர் படுத்தப்படுக்கையாக இருக்கிறார் என்று பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தது. ஆனால் இது தொடர்பான உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
வதந்தி
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என் கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது. அவரின் உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது, இதய அறுவை சிகிச்சை ஒன்றின் காரணமாக அவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. அவருக்கு புகை பழக்கம் காரணமாக இப்படி உடல் நிலை மோசம் அடைந்துள்ளது என்று கூறப்பட்டது. கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடைசியாக எப்போது வெளியே வந்தார்
கடைசியாக கிம் ஜோங் உன் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வெளியே வந்தார். அதன்பின் அவர் வெளியே எங்கும் வரவில்லை. இதனால்தான் இந்த சந்தேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அரசு சார்பாக நடந்த எந்த விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. கிம் ஜோங் உன் இப்படி காணாமல் போவது இது முதல்முறை இல்லை. இதேபோல் இதற்கு முன்பும் கூட ஒருமுறை கிம் ஜோங் உன் காணாமல் போய் இருக்கிறார். 2014ல் இதேபோல் கிம் ஜோங் உன் காணாமல் போனார் .
எங்கே போனார்
2014ல் சுமார் 6 வாரங்கள் இவர் காணாமல் போய் இருந்தார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2014ல் செப்டம்பர் 3ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை இவர் எங்கே சென்றார் என்று அப்போது தெரியவில்லை. அப்போதும் அந்நாட்டில் அரசு சார்பாக இதேபோல் நிறைய விழாக்கள் நடந்தது. ஆனால் அந்த விழாக்கள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. கிம் ஜோங் எங்கே போனார் என்பதுதான் அப்போது உலகம் முழுக்க பேச்சாக இருந்தது.
மரணம் குறித்து வதந்தி
அப்போதும் இதேபோல் அவரின் மரணம் குறித்து வதந்திகள் பரவியது. கிம் ஜோங் உன்னிற்கு இதயத்தில் பிரச்சனை. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவர் பலியாகிவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவியது. அதேபோல் அவருக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது, கையில் எலும்பு ஒன்று நீக்கப்பட்டது, கிட்னி நீக்கப்பட்டது என்றும் கூட நிறைய செய்திகள் வந்தது.
புது அதிபர்
அப்போதும் கூட இதேபோல் வடகொரியாவின் புதிய அதிபர் யார் என்று நிறைய செய்திகள் உலவ தொடங்கியது. அப்போதும் கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜுங்தான் கவனம் ஈர்த்தார். இப்போது எல்லோரும் கிம் யோ குறித்து பேசுவது போல அப்போதும் எல்லோரும் கிம் யோ குறித்துதான் பேசினார்கள். கிம் ஜோங் உன் பலியாகிவிட்டார், அதனால் கிம் யோதான் அடுத்த அதிபர் என்றெல்லாம் செய்தி வெளியானது.
மீண்டும் வந்தார்
ஆனால் இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சரியாக 6 வாரங்களுக்கு பிறகு மீண்டும் கிம் ஜோங் உன் வெளியே வந்தார். ஆம் மீண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை செய்ய மீடியா முன் தோன்றினார். முன்பை விட மிகவும் ஆரோக்கியமாக அவர் காணப்பட்டார். இதன் மூலம் அவர் பலியாகிவிட்டார் , அவருக்கு இதய ஆபரேஷன் என்று வெளியான வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் கிம் ஜோங் 2014ல் அந்த 6 வாரம் என்ன செய்தார், எங்கே சென்றார் என்பது மட்டும் தெரியவில்லை.
வருவாரா
தற்போது அதேபோல் மீண்டும் கிம் ஜோங் உன் காணாமல் போய் உள்ளார். இப்போதும் அவரின் உடல் நிலையில் பிரச்சனை, அவர் பலியாகிவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி வருகிறது. இப்போதும் கிம் யோதான் அடுத்த அதிபர் என்று சொல்லி வைத்தார் போல அதே ''பேட்டர்னில்'' செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை கிம் ஜோங் உன் கம் பேக் கொடுக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் நம்புகிறார்கள்.
சுவாரசிய ஒற்றுமை
இரண்டு முறையும் கிம் ஜோங் காணாமல் போன சம்பவங்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை மட்டும் உள்ளது. 2014 கிம் ஜோங் காணாமல் போன போது 2014ல் ஆப்ரிக்காவில் எபோலா பரவி வந்தது. அப்போது வடகொரியாவில் எபோலா வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டது. அப்போதும் கிம் ஜோங் உன் காணாமல் போனார். தற்போது அதேபோல் உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் நிலையில் திடீர் என்று கிம் ஜோங் உன் மாயமாகி உள்ளார்.