ஆங் சான் சூகியின் முன்னாள் டிரைவர் ஹிதின் கியாவ் மியான்மரின் புதிய அதிபரானார்
யங்கூன்: மியான்மர் நாட்டின் புதிய அதிபராக ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அங்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி இரு சபைகளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தற்போதைய மியான்மர் அதிபரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால், புதிய அதிபர் ஏப்ரல் 1ம் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மியான்மர் சட்டப்படி அதிபரை எம்.பி.க்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, அவர் தனது ஆதரவாளரும், நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் (67) என்பவரை அதிபர் வேட்பாளராக்கினார். ஹிதின், ஆங் சான் சூகியின் முன்னாள் கார் டிரைவர் ஆவார்.
அவர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவு பெற்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று ஹிதின், மியான்மரின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, கடந்தவாரம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிதின், தனது புதிய அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டார். அதில், ஆங் சான் சூகியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
எனவே, அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவரான ஆங் சான் சூகி, விரைவில் மியான்மரின் அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பல முக்கிய துறைகள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications