மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு 3 மாதத்திற்குப் பின் பிரசவம் : ஹங்கேரி மருத்துவர்கள் சாதனை
புடாபெஸ்ட்: மூளைச்சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவ உலகின் முன்னேற்றத்தால் கிட்டத்தட்ட 92 நாட்கள் வயிற்றிலேயே வளர்த்து பத்திரமாக பிரசவிக்கச் செய்து ஹங்கேரி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
பொதுவாக விபத்து மற்றும் சில உடல் நலக் கோளாறுகளினால் மூளைச்சாவு அடைபவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளைக் கொண்டு பாதிக்கப் பட்ட 7 பேரின் வாழ்க்கையை ஒளியூட்டலாம் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் திடீர் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தகுந்த மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளித்து அவரது வயிற்றில் இருந்த குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர் ஹங்கேரி மருத்துவர்கள்.

மூளைச்சாவு...
கிழக்கு ஹங்கேரியைச் சேர்ந்த 31 வயதுக் கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு அவரது 15ஆவது வார கர்ப்பகாலத்தில் மூளையில் திடீர் ரத்தப்பெருக்கு ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

ஆரோக்கியமான குழந்தை....
ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது வயிற்றில் இருந்த கரு நன்கு ஆரோக்கியத்துடன் இருந்துள்ளது. ஆனால், அப்போது அக்குழந்தை வெளி உலகிற்கு வரும் நிலையில் இல்லை. இதனால், தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு அப்பெண்ணை இன்னும் சில வாரங்கள் அதே நிலையில் மருத்துவமனையில் வைத்துப் பாதுகாக்கலாம் என முடிவு செய்யப் பட்டது.

அறுவைச் சிகிச்சை மூலம்....
அதனைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்ட அப்பெண்ணுக்கு தேவையான மருத்துவம் செய்யப்பட்டது. இதன்மூலம் அவரது வயிற்றில் இருந்த சிசு ஆரோக்கியமாக வளர்ந்தது. வயிற்றிலிருந்த சிசுவிற்கு 27 வாரங்கள் ஆனதும் அந்தக் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

உடல் உறுப்புத் தானம்....
கிட்டத்தட்ட 92 நாட்கள் உயிருடன் காப்பாற்றப்பட்ட அந்தப் பெண்ணின் இதயம், கணையம், கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் ஆகியவை நான்கு நோயாளிகளுக்கு உறுப்புத் தான முறையில் பொருத்தப்பட்டது.

பெலோ புரேடி...
சென்ற கோடைக்காலத்தில் பிறந்ததாகக் கூறப்படும் அந்த ஆண்குழந்தை 1.42 கிலோகிராம் எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தது எனவும், தற்போது அக்குழந்தை குடும்பத்தினரிடம் வளர்ந்து வருவதாகவும் டெப்ரீசன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் மையத்தின் தலைவரான பெலா புரேடி சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சட்டப்படிக் குற்றம்....
உறுப்பு தான விஷயங்கள் ஹங்கேரி சட்டத்தின்படி பாதுகாப்பாக வைக்கப்படும் என்பதால் அந்தக் குடும்பத்தினர் பற்றிய விபரங்களை புரேடி வெளியிட மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications