”ஆதாரமற்ற குற்றங்களுக்காக நாட்டை விட்டு ஓடமாட்டேன்” – பர்வேஷ் முஷரப்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தான் பாகிஸ்தனை விட்டு ஓடியெல்லாம் செல்ல மாட்டேன் என்றும், தன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தொண்டர்களிடையே, நேற்று தொலைபேசி மூலம் அவர் உரையாற்றும்போது, "நான் பாகிஸ்தானை விட்டு ஒருபோதும் ஓடமாட்டேன். மாறாக என்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன்.
எனினும் நோய்வாய்ப்பட்ட எனது தாயை பார்ப்பதற்காக நான் துபாய்க்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கிருந்து நான் உடனே நாடு திரும்பி விடுவேன்" என்று தெரிவித்தார்.
முன்னதாக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், செனட் சபையின் தலைவருமான ராஜா ஜபருல் கூறுகையில், "முஷரப் வெளிநாடு செல்லும் விவகாரத்தில் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முஷரப் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.