பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் குல்சார் அகமது? இம்ரான் கான் பரிந்துரை.. யார் இவர்? பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமரை இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் நாட்டில் அரசியல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சில வாரங்களுக்கு முன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி இம்ரான் கான் அரசில் இடம் பெற்றிருந்த பல்வேறு கூட்டணிக் கட்சிகளும் கூட அவருக்கு எதிராகத் திரும்பி விட்டன. இதனால் அவரது ஆட்சி நிச்சயம் கவிழும் என்ற சூழல் இருந்தது.

பாகிஸ்தான் அரசியல் குழப்பம்
இந்தச் சூழலில் நேற்றைய தினம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இம்ரான் கான் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது பாக். அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதைச் செல்லாது என்று அறிவித்தார் பொறுப்பு சபாநாயகர் காசிம் கான். ஷெபாஸ் ஷெரீபை பாகிஸ்தான் புதிய பிரமராக ஆக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்த நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்தனர்.

உச்ச நீதிமன்றம்
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று, முன்கூட்டியே தேர்தலை நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அந்நாட்டின் அதிபர் ஆரிஃப் ஆல்வி. தேர்தல் நடைபெறும் வரை இம்ரான் கான் அதிபர் பதவியில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் பிரதமர் பதவியில் தொடர முடியாது என்று அறிவிக்கப்பட்டது.

அதிபர் அறிவிப்பு
இதையடுத்து தற்காலிக பிரதமராகச் செயல்பட தங்கள் பரிந்துரையை அளிக்குமாறு இம்ரான் கான் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு அதிபர் ஆரிஃப் ஆல்வி கடிதம் எழுதினார். அடுத்த 3 நாட்களில் இரு தரப்பிற்கும் இடையே இடைக்கால பிரதமர் நியமனத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால் சபாநாயகர் தலைமையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் உடன் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் ஆரிஃப் ஆல்வி குறிப்பிட்டிருந்தார்.

பரிந்துரை
இருப்பினும், இந்த நடைமுறையைச் சட்ட விரோதமானது என்று குறிப்பிட்ட ஷெபாஸ் ஷெரீப், இதில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார். அதிபரும் பிரதமரும் பாகிஸ்தான் அரசியலமைப்பை மீறி உள்ளதாகவும் இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் பரிந்துரைப்படி செயல்படுவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

குல்சார் அகமது
இந்தச் சூழலில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக குல்சார் அகமதுவை பரிந்துரை செய்தார் இம்ரான் கான். பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர் குல்சார் அகமது. இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பணிகள் குல்சார் அகமது தலைமையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications