கங்கைக்கு குறுக்கே அணை.. இந்தியாவிடம் கேட்காமல் வங்கதேசம் செய்யும் காரியும்.. வெடிக்கும் சர்ச்சை
டாக்கா: இந்தியாவுக்கும் பல அண்டை நாடுகளுக்கும் இடையே நதி நீர் ஒப்பந்தங்கள் இருந்து வருகிறது. அப்படி இந்தியா பாகிஸ்தான் இடையே போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியா வங்கதேசம் இடையேயான கங்கை ஒப்பந்தம் இந்தாண்டு உடன் முடியும் நிலையில், இதுவும் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவிற்கும் அண்டை நாடான வங்கதேசத்திற்கும் இடையிலான உறவில், நதிநீர் பங்கீடு எப்போதும் ஒரு பரபரப்பான அத்தியாயம் தான். தற்போதைய சூழலில், வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கும் கங்கை நதிநீர் ஒப்பந்தத்தை மையமாக வைத்து, வங்கதேசத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ள வங்கதேசத் தேசியவாத கட்சி இந்தியாவுக்கு ஒரு மறைமுக அழுத்தம் கொடுத்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

கங்கை ஒப்பந்தம்
1996-ம் ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது போடப்பட்ட 30 ஆண்டுக்காலக் கங்கை நதிநீர் ஒப்பந்தம் வரும் டிசம்பருடன் முடிகிறது. இந்நிலையில், டாக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிஎன்பி பொதுச்செயலாளரும் அமைச்சருமான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், "இந்தியாவுடன் நல்லுறவை நீட்டிக்க வேண்டுமா என்பது கங்கை நதிநீர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதைப் பொறுத்துத்தான் இருக்கிறது" என ஓப்பனாகவே பேசியுள்ளார்.
கோபம்
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்குள் நுழையும் கங்கை நதி, அங்கே 'பத்மா' என்று அழைக்கப்படுகிறது. வங்கதேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 17 கோடியில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கும் விவசாயத்திற்கும் இந்த நதியைத்தான் நம்பியிருக்கிறார்கள். இந்தியாவின் ஃபராக்கா அணையால் தங்களுக்குக் கோடைக் காலத்தில் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்பதும், இதனால் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதும் வங்கதேசத்தின் நீண்டகாலக் குற்றச்சாட்டாக இருக்கிறது..
பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச அரசு, ஃபராக்கா அணையின் நெகட்டிவ் தாக்கத்தைச் சமாளிக்க, பத்மா நதியின் குறுக்கே ஒரு பிரம்மாண்ட அணை கட்டும் திட்டத்திற்கு இந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மெகா திட்டம் 2033க்குள் முடிக்கப்படவுள்ளது. இது குறித்துப் பேசிய வங்கதேச நீர்வளத்துறை அமைச்சர் ஷாஹிதுதீன் சௌத்ரி, "இந்த அணை எங்களது தேசிய நலன் சார்ந்தது, இதற்கு இந்தியாவுடன் எந்த ஆலோசனையும் நடத்தத் தேவையில்லை" எனக் கூறியிருந்தார்..
ஆட்சி மாற்றம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நீண்டகாலமாக இழுபறியில் இருக்கும் தீஸ்தா நதிநீர் ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாக மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை பிஎன்பி தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். தற்போது மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை வரவேற்றுள்ள வங்கதேசம், "இனிமேலாவது தீஸ்தா நதிநீர் விவகாரத்தில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்" என நம்புகிறது. வங்கதேசத்துடன் மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலம் மேற்கு வங்கம் என்பதால், மேற்கு வங்க மாநில அரசோடு நெருக்கமான உறவை வளர்க்க வங்கதேசம் விரும்புகிறது.
வங்கதேசத்தின் இந்த அதிரடி நகர்வுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் முக்கிய பதில்களைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், "இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே 54 ஆறுகள் ஓடுகின்றன. இதைப் பேச முறையான இருதரப்பு அமைப்புகள் உள்ளன.. அவை தொடர்ந்து கூடிப் பேசி வருகின்றன" என்றார்.
இந்தியாவின் நிலைப்பாடு
அதே நேரத்தில் பாகிஸ்தானைச் சாடிய ஜெய்ஸ்வால், 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதன் காரணமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். கங்கை நதி என்ன தான் வங்கதேசத்திற்கு முக்கியமானதாக இருந்தாலும் இந்தியாவிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அணை கட்டத் துணிந்திருப்பது பரபரப்பையே கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications