எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு செக்.. லடாக்கில் 135 கி.மீட்டருக்கு சாலைகள்.. இந்தியா பக்கா பிளான்
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லடாக்கில் 135 கி.மீட்டர் தொலைவுக்கு சாலைகளை அமைக்கும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.
பீஜிங்: எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லடாக்கில் 135 கி.மீட்டர் தொலைவுக்கு சாலைகளை அமைக்கும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. குடியரசு தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த சாலைப் பணிகள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவும் சீனாவும் சுமார் 4 ஆயிரம் கி.மீட்டர்கள் எல்லைப் பகுதியை பகிர்ந்துள்ளது. லடாக்கில் தொடங்கி அருணாசல பிரதேசம் வரை இந்த எல்லைப் பகுதி நீள்கிறது.
ஆசியாவில் தன்னை வல்லாதிக்க நாடாக காட்டிக்கொள்ள முனையும் சீனா அண்டை நாடுகளுடன் சமீப காலமாக மோதல் போக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆசியாவில் சீனாவுக்கு கடும் சவால் அளிக்கும் நாடாக உள்ள இந்தியாவுடனும் தனது வேலையை காட்டி வருகிறது.
ஒரு கொடி நட ரூ.10000.. பணத்தை விதைத்து தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் பாஜக.. வைகோ ஆவேசம்!
உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் சீனா
இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமான அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா கூறி வருகிறது. அதேபோல், எல்லையில் அவ்வப்போது இந்திய பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னிச்சையாக அங்கு இருக்கும் இயல்பான சூழலை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்கத் தவறுவது இல்லை. இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ராணுவ கட்டுமானங்கள் உள்கட்டமைப்பு வசதிகளையும் சீனா மேம்படுத்தி வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது.
135 கி.மீட்டர் நீளம் கொண்டதாக
சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், லடாக்கில் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணிகளை இந்தியா தொடங்கியிருக்கிறது. 135 கி.மீட்டர் நீளம் கொண்டதாக இந்த சாலைகள் அமைக்கப்படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு
பாங்கோங் சோவிற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுஷுல் மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் ஆகிய இரு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த சாலை அமைகிறது. இந்த சாலை மூலம் ITBP ஹெனா நிலைகளை மறைக்கும் வகையில் இருக்கும், டங்டி (Dungti) திபெத்திய அகதிகள் முகாமை விரைவாகவும் அணுக முடியும்.
அடுத்த 2 ஆண்டுகளில்
கிழக்கு லடாக் பகுதியில் இருந்து நாட்டின் 3 முக்கிய சாலைகள் இணைக்கும் வகையில் அமைய இருக்கும் இந்த சாலை கிட்டதட்ட சிந்து நதியை ஒட்டியே செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலைப்பணிகளை கடந்த 26 ஆம் தேதி எல்லை சாலைகளை அமைக்கும் பணியை மேற்கொள்ளும் அமைப்பு தொடங்கியிருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சாலை திட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கான்கிரீட் பாலம்
லோமா பகுதியில் உள்ள சிந்து நதியில் அமைக்கப்பட்டு இருக்கும் இரும்பு பாலத்தை மாற்றி கான்கீரிட் பாலம் அமைக்கும் திட்டமும் செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது. கான்கீரிட் பாலமாக மாற்றப்பட்டால் கிழக்கு லடாக் பகுதிகளுக்கு கனரக ராணுவ தளவாடங்களையும் எளிதாக கொண்டு செல்ல முடியும். கிழக்கு லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சினை நீடித்துக்கொண்டு இருக்கும் முக்கிய இடங்களில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.