இந்திய வாலிபர் சிங்கப்பூரில் அடித்துக் கொலை
சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த வாலிபர் சிங்கப்பூரில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சிங்கப்பூரின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பந்தன் என்ற இடத்தில் ஒரு வாலிபர் சடலம் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், கொலையானவர் இந்தியாவை சேர்ந்த சுரேஷ் குமார் (26) என்று தெரியவந்தது.
சுரேஷ் குமார் விழுந்து கிடந்த இடத்தில் ரத்த கறை படிந்திருந்தது. அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்துள்ளன என்று சிங்கப்பூர் நகர பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கப்பல் நிறுவனம் ஒன்றில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து குமார் பணியாற்றி வந்த நிலையில் அவரது மரணம் குறித்து நிறுவனத்தின் செயல் இயக்குநர் வாங் பூன் டியாங் கூறும்போது, நேர்மறையான மற்றும் கடின உழைப்பாளி என்று கூறியுள்ளார். குமாரின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம் என்று வாங் கூறியுள்ளார். குமாரின் பெற்றோர் இந்தியாவில் வசித்து வருகின்றனர். 30 வயது நிறைந்த சகோதரர் அவருடன் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். கொலைக்கான காரணம் தெரியவில்லை.