"என்னா அடி" பயிற்சி ஆட்டத்தில் ருத்ர தாண்டவம்.. சேவாக்கை கண்முன் நிறுத்திய கேஎல் ராகுல்!
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் கேஎல் ராகுலின் ருத்ர தாண்டவம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கு போதுமான விளம்பரத்தை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வந்தது.
உலகக்கோப்பைக்கான பாடல், வீரர்களின் எதிர்பார்ப்பு, நட்சத்திர வீரர்களின் பேட்டி, கொண்டாட்டங்கள் என எதையும் ஆஸ்திரேலிய நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை என்று ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது.
பயிற்சி போட்டி
ஆனால் அனைத்தையும் மறக்கும் வகையில் ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை வீழ்த்தி நமீபியா அணி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனால் உலகக்கோப்பை மீதான எதிர்பார்ப்பும், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதற்கான முதல் கட்டமாக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது.
கேஎல் ராகுல் ருத்ரதாண்டவம்
இன்று தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் வழக்கம் போல் கேஎல் ராகுல் - ரோஹித் ஷர்மா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல், கம்மின்ஸ், ஸ்டார்க், ரிச்சர்ட்சன் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக ஸ்டாய்னிஸ் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 ரன்களை விளாசினார்.
சேவாக்கை நினைவுபடுத்திய ராகுல்
இன்னும் சொல்லப்போனால் ரோஹித் ஷர்மா 1 ரன் மட்டுமே எடுத்திருந்த போது, மறுமுனையில் நின்றிருந்த கேஎல் ராகுல் அரைசதத்தை கடந்தார். இது பலருக்கும் சேவாக்கை நினைவுபடுத்தியது. இறுதியாக 33 பந்துகளுக்கு 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுலின் ஆட்டம் இந்திய ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எப்போதும் நிதானமாக விளையாடும் பழக்கம் கொண்ட கேஎல் ராகுல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் குறிப்பாக ஸ்ட்ரைக் ரேட்டை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் விளையாடியுள்ளார்.
ரசிகர்கள் நம்பிக்கை
ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் பெரிய மைதானங்களே இருக்கும் நிலையில், சிக்சர், பவுண்டரி என்று கேஎல் ராகுல் விளாசியுள்ளார். இந்திய அணியின் டாப் 3 வீரர்களுக்கும் இடது கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமங்களை சந்திக்கும் நிலையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் கேஎல் ராகுல் களத்தில் ஆக்ரோஷம் காட்டியுள்ளது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.