பாகிஸ்தானின் அணு ஆயுத தளங்களை குண்டு வீசி தகர்க்கத் திட்டமிட்ட இந்திரா காந்தி
வாஷிங்டன்: பாகிஸ்தானின் அணு ஆயுத தளங்களை குண்டு வீசித் தாக்கி தகர்த்துத் தரைமட்டமாக்க முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி திட்டமிட்டதாக அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் ரகசிய ஆவணக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த சமயத்தில், பாகிஸ்தானுக்கு அதி நவீன எப் 16 போர் வி்மானங்களைக் கொடுக்க அமெரிக்கா தயாராகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1981ம் ஆண்டு இந்தத் திட்டத்தை இந்திரா காந்தி தீட்டியிருந்தார். 1980ல்தான் அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். பதவிக்கு வந்த சூட்டோடு இந்தத் தாக்குதல் திட்டத்தை யோசித்திருந்தார் என்று சிஐஏ குறிப்பு கூறகிறது. இந்தத் தாக்குதல் மூலம் பாகிஸ்தான் எதிர்காலத்தில் அணு ஆயுத பலத்தைப் பெறாமல் தடுக்க முடியும் என்பது இந்திராவின் யோசனையாகும்.
'India's Reaction to Nuclear Developments in Pakistan' என்ற தலைப்பில் சிஐஏ இந்த ஆவணத்தை அமெரிக்க அரசிடம் வழங்கியிருந்தது. 1981ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது.
12 பக்க ஆவணம்
12 பக்கம் கொண்ட இந்த ஆவணத்தை சிஐஏ தனது இணையதளத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திரா காந்தி பாகிஸ்தானுக்கு எதிராக யோசித்து வைத்திருந்த ரகசியத் திட்டத்தை அது விவரித்துள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டம்
1981ம் ஆண்டு பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டம் குறித்து இந்திரா காந்தி கவலை அடைந்திருந்தார். அணு ஆயுதத் திட்டத்தில் பாகிஸ்தான் முன்னேறி வருவது குறித்து அவர் கவலை அடைந்தார்.
அமெரிக்காவுக்கும் அதே கவலைதான்
பாகிஸ்தான் விரைவிலேயே அணுகுண்டை தயாரித்து விடும் அல்லது பெற்று விடும் நிலை அப்போது இருந்தது. இதே கவலைதான் அமெரிக்காவுக்கும் இருந்தது.
நிலைமை முற்றினால் அடிதான்
அந்த சமயத்தில்தான், இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதத்தைத் தயாரித்து விடும் நிலை ஏற்பட்டால் அந்த நாட்டுக்கு எதிராக ராணுவத் தாக்குதலை மேற்கொள்ளும் முடிவில் இந்திரா காந்தி இருந்தார். பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதத் தளங்களையும், கட்டமைப்புகளையும் குண்டு வீசித் தாக்கி தரைமட்டமாக்கும் திட்டத்துடன் இந்திரா காந்தி இருந்தார்.
இறுதி முடிவு எடுக்கவில்லை
இருப்பினும் யோசனை அளவில்தான் இந்திராவின் திட்டம் இருந்ததே தவிர அவர் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. அதில் அவர் நிதானம் காட்டினார் என்று சிஐஏ அறிக்கை கூறியுள்ளது.
புளுட்டோனியம், யுரேனியம் தயாரிப்பு
அந்த சமயத்தி்ல் புளுட்டோனியம் தயாரிப்பில் முக்கிய கட்டத்தை பாகிஸ்தான் எட்டியிருந்தது. மேலும் யுரேனியம் செறிவூட்டலிலும் அது முக்கிய கட்டத்தை நெருங்கியிருந்தது.
அணு குண்டு தயாரிப்புக்கு உத்தரவு
இதை அறிந்த இந்திரா காந்தி, இந்தியாவிலும் அணு குண்டு சோதனை நடத்துவதற்கு தயாராகுமாறு அணு விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டார்.
தார் பாலைவனம்
1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தார் பாலைவனத்தில் அணு குண்டு சோதனை நடத்துவது தொடர்பான ஆயத்த வேலைகளுக்கு உத்தரவிடப்பட்டது. பூமிக்கு அடியில் ஒரு அணுகுண்டை எப்போது வேண்டுமானாலும் வெடித்து சோதனை செய்து பார்க்கவும் உத்தரவிடப்பட்டது.
40 கிலோடன் குண்டு ரெடி
பிப்ரவரியில் தொடங்கிய இந்த ஆயத்தப் பணிகள் மே மாதம் முடிவடைந்தன. அப்போது இந்தியா 40 கிலோடன் அணு குண்டை சோதனை பார்க்கவும் தயார் நிலையில் இருந்தது.
பாகிஸ்தான் வெடித்தால்
பாகிஸ்தான் தனது அணு ஆயுத சோதனையை நடத்தினால் அடுத்த ஒரு வாரத்தில் இந்தியா தனது அணு ஆயுத சோதனையை நடத்தும் நிலை அப்போது இருந்தது.
அவசரப்பட மாட்டார் இந்திரா
அப்போதைய சிஐஏ அதிகாரி கொடுத்திருந்த அறிக்கையில், இந்திரா காந்தி யோசனை அளவில்தான் இருக்கிறார். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் எப் 16 போர் விமானங்கள் மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையை நடத்தினால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைப் பொறுத்து அவர் முடிவெடுக்கக் கூடும். நிலைமை முற்றினால் நிச்சயம் அவர் பாகிஸ்தானைத் தாக்க உத்தரவிடுவார் என்பது உறுதி. அதேசமயம், இந்திரா காந்தி அவசரப்பட மாட்டார், பொறுத்திருந்து பார்ப்பார் என்றே நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
அந்த சமயத்தில் ஏற்பட்ட அந்த பரபரப்பிலும் கூட இந்திரா காந்தி நிதானம் காட்டினார். தாக்குதலுக்கு அவர் உத்தரவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.