காசா மீது வைக்கப்பட்ட கண்.. நள்ளிரவில் உக்கிரமடைந்து தாக்கிய இஸ்ரேல்.. இணைய சேவை துண்டிப்பு
காசா: ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் கடந்த 21 நாட்களாக பதில் தாக்குதலை நடத்தி வந்த நிலையில், 22வது நாளாக இன்றும் இந்த தாக்குதல் நீடிக்கிறது. இன்று அதிகாலை முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக காசா மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 7ம் தேதி இந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை கொண்டு பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நாடாக தன்னை கூறிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை அந்நாடு ஏற்கவில்லை. எனவே 7ம் தேதி தொடங்கி இன்று வரை இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

எந்த அளவுக்கு தீவிரம் எனில், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, இஸ்ரேல், காசா மீது ஒரே வாரத்தில் வீசிவிட்டது. இந்த அளவு தீவிரமான தாக்குதல் காரணமாக இதுவரை 2,913 குழந்தைகள் உட்பட 7,028 பேர் உயிரிழந்துள்ளனர். 18,484 பேர் படுகாயமடைந்துள்ளனர். மறுபுறம் காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. பொதுமக்கள் மட்டுமல்லாது ஐநாவின் செயற்பாட்டாளர்கள் 35 பேரும், பத்திரிகையாளர்கள் 32 பேரும் இஸ்ரேலின் குண்டுவீச்சில் பலியாகியுள்ளனர்.
வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை முயன்று வருகிறது. தற்போதுவரை சில பீரங்கிகளை காசாவுக்குள் அனுப்பி தாக்குதலை நடத்தி வருகிறது. அதேபோல தரைப்படைக்கு உதவும் விதமாக வான்வழி தாக்குதலும், கடற் பரப்பிலிருந்தும் தாக்குதல் காசா மீது தொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆக்கிரமிப்பு படையின் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், "இத்தனை நாட்கள் நடத்திய வான்வழி தாக்குதலின் தொடர்ச்சியாக தற்போது தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஹமாஸ் படையினர், "இஸ்ரேலின் தாக்குதலை முழு பலத்துடன் எதிர்கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர். இருப்பினும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் தொலைத்தொடர்பு, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் இருந்து செயல்படும் ரெட் கிராஸ் செயல்பாட்டாளர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று ரெட் கிராஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தவிர காசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல் ஷிஃபா-வை சுற்றியுள்ள இடங்களில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஏற்கெனவே இதேபோன்று மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications