ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக்
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், தற்போது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைக்கும் ஒரு மிக மோசமான சூழலை எட்டியுள்ளது.
சர்வதேச நாடுகளின் சமாதான முயற்சிகளையும் மீறி, ஈரானின் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்கள் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, சர்வதேசக் கடல்சார் வர்த்தகத்தின் உயிர்நாடிகளாக விளங்கும் இரு முக்கியக் கடல் வழிகளையும் ஈரான் ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் நள்ளிரவு வெறியாட்டம்
ஈரானின் முக்கிய எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் உற்பத்தி பகுதியான குஜெஸ்தான் மாகாணத்தின் மஹ்ஷஹ்ர் (Mahshahr) நகரில் அமைந்துள்ள 'காருண் பெட்ரோகெமிக்கல் வளாகம்' (Karun Petrochemical Complex) மீது இஸ்ரேல் போர் விமானங்கள் இன்று சரமாரி குண்டுமழை பொழிந்துள்ளன.
ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் (Fars) வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேலின் இந்த வான்வழித் தாக்குதலில் காருண் வளாகத்தின் முக்கிய உற்பத்தி உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்து தீப்பற்றி எரிந்து வருகின்றன.
மஹ்ஷஹ்ர் பகுதியில் எழுந்த கரும்புகை மற்றும் தீப்பிழம்புகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களைப் பீதியடைய வைத்துள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரான், இஸ்பஹான் மற்றும் கரஜ் ஆகிய முக்கிய நகரங்கள் முழுவதும் அடுத்தடுத்து பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளது.
ஈரானின் அதிரடி ஆக்ஷன்
ஈரானின் முக்கியப் பொருளாதார மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தனது பழிவாங்கல் நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கியுள்ளது.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் கலிபாஃபாவுக்கு நெருக்கமான அரசு வட்டாரங்கள் விடுத்துள்ள அதிரடி தகவல் படி, சர்வதேசக் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) பகுதியை ஏற்கனவே மூடியிருந்த ஈரான், தற்போது செங்கடலின் நுழைவாயிலான 'பாப் எல்-மன்டெப் நீரிணை' (Bab el-Mandeb Strait) பகுதியையும் ஒட்டுமொத்தமாக முழுமையாக முடக்கியுள்ளது.
உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடந்து செல்லும் இந்த இரு பெரும் கடல் வழிகளும் ஒரே நேரத்தில் முழுமையாக மூடப்பட்டிருப்பது சர்வதேச வர்த்தக வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.
ஹவுதிகளுடன் கைகோர்த்த ஈரான்
கடல் வழிகளை முடக்கியதோடு மட்டுமல்லாமல், இஸ்ரேல்-க்கு பாடம் புகட்ட ஈரான் மற்றும் ஏமனின் ஹவுதி (Houthis) கிளர்ச்சியாளர்கள் படை ஒருங்கிணைந்து பிரம்மாண்ட கூட்டு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இரு தரப்பும் இணைந்து ஏவிய நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் முக்கிய வணிக நகரங்களான டெல் அவிவ் (Tel Aviv) மற்றும் ஹைஃபா (Haifa) ஆகிய நகரங்களுக்குள் நேரடியாகப் பாய்ந்து தாக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications