"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸில் ஈரான் போட்ட கெடுபிடி.. சிக்கல் மேல் சிக்கல்! அப்போ இந்தியா?
தெஹ்ரான்: உலக கச்சா எண்ணெய் சப்ளையில் 5ல் ஒரு பங்கு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியில் இப்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதற்கிடையே ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களிடம் சுங்க கட்டணத்தை வசூலிக்கும் பிராசஸை ஈரான் தொடங்கியுள்ளது. இதற்காக விரிவான ஒரு திட்டத்தையும் ஈரான் போட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி இப்போது ஒரு புதிய 'நிழல் யுத்தம்' தொடங்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் விலகாத நிலையில், அந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஹார்முஸ்
ஏற்கனவே ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்க கட்டணத்தை வசூலிப்போம் என ஈரான் கூறியிருந்த நிலையில், இப்போது அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன்படி 'பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ள ஈரான், அந்த வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலும் குறிப்பிட்ட தொகையைச் சுங்கக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.. இது மட்டுமின்றி, தங்களைப் பற்றிய 40க்கும் மேற்பட்ட தகவல்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகவே செல்வதால், ஈரானின் இந்த அதிரடி நகர்வு கச்சா எண்ணெய் விலையை மேலும் எகிற வைத்துள்ளது.
சுங்க கட்டணம்
ஈரானின் இந்த புதிய விதிகளின்படி, கப்பல்கள் தங்களின் உரிமையாளர்கள், இன்சூரன்ஸ் விவரங்கள், மாலுமிகளின் குடியுரிமை மற்றும் பயணப் பாதை குறித்த தகவல்களை ஈரான் அறிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் ஏதேனும் தவறான தகவல் இருந்தால், அந்தக் கப்பல்கள் சிறைபிடிக்கப்படும் அல்லது திருப்பி அனுப்பப்படும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை ஆதரிக்கும் நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடப்பதில் பெரும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என ஈரான் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை நமது நாட்டின் கப்பல்கள் ஹார்முஸை கடக்க ஈரான் ஏற்கனவே அனுமதி கொடுத்துள்ளது. இதனால் இந்தியக் கப்பல்கள் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ஹார்முஸை கடக்கும். இந்தியா மட்டுமின்றி சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் ஈரான் ஏற்கனவே அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓமன்
ஹார்முஸை பொறுத்தவரை அது ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இதனால் தாங்கள் வசூலிக்கும் சுங்க வரியை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, ஈரானை தொடர்ந்து விமர்சித்தே வருகிறது. நேரடியாகப் போர் நின்றுவிட்ட போதிலும், ஈரானின் துறைமுகங்களுக்கு எந்தவொரு கப்பலும் செல்லாத வகையில் முற்றுகையிட்டுள்ளது.
இந்தியா
ஹார்முஸ் நெருக்கடி மேலும் நீடித்தால் அது சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகத்தில் ஒரு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்து இருப்பதாலேயே பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்தினார். 'வொர்க் ஃபிரம் ஹோம்' கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வரவும், தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும் மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் அமெரிக்காவின் ஆதிக்கம், மறுபுறம் ஈரானின் பிடிவாதம் என இருமுனைத் தாக்குதலில் சிக்கியுள்ள கச்சா எண்ணெய் சப்ளை, சாமானிய மக்களின் சமையலறை வரை அதன் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. இந்தப் பவர் கேம் நிரந்தரமாக முடிவுக்கு வராத வரை, பதற்றம் தொடரவே செய்யும்!












Click it and Unblock the Notifications