வாய்ப்பில்லை ராஜா வாய்பில்லை! ஈரானை இறங்க வைக்க முடியாது! அமெரிக்காவுக்கு சவால் விட்ட அதிபர்!
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் காரணமாக மேற்காசியாவில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானை சரணடைய வைக்க முயலும் எந்த நடவடிக்கையும் இறுதியில் தோல்வியை தான் சந்திக்கும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்பு நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை எந்த முடிவும் இல்லாமல் முடிந்ததால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்கிடையில், முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை மேற்காசியாவில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் போர்
இந்த சூழ்நிலையில், ஈரான் அரசு ஊடகத்திற்கு அளித்த அறிக்கையில் மசூத் பெசஷ்கியான் கூறியதாவது, "நாங்கள் எப்போதும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறோம். ஆனால் எங்களை சரணடைய நிர்பந்திப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். ஈரானை பலவந்தமாக சரணடைய வைக்க முயன்றால் அது நிச்சயமாக தோல்வியடையும். எங்கள் மக்கள் அத்தகைய அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஈரான் ஒருபோதும் போரை நாடியதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பதற்றம்
மேலும், ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சட்ட ரீதியான எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோரைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவது எந்த சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்று அவர் சாடியுள்ளார். பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற முக்கிய கட்டிடங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான்
இந்த மோதலின் தொடக்கம் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நடந்த தாக்குதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
தற்காலிக போர்நிறுத்தம்
பின்னர், இந்த பதற்றத்தை குறைக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. இந்த போர்நிறுத்த காலம் 21ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்குள் நிரந்தர உடன்பாடு ஏற்படுத்த பல தரப்பினரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தி
அதன்படி, கடந்த சனிக்கிழமை இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டாமல் முடிவடைந்தது. இதையடுத்து, டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஈரான் அதிபர்
அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் குறையாமல் தொடரும் நிலையில், ஈரான் அதிபரின் இந்த கடும் எச்சரிக்கை உலக நாடுகளின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா? அல்லது மீண்டும் பதற்றம் அதிகரிக்குமா? என்பதும் உலகளவில் உற்று நோக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications