ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால்.. இஸ்ரேல் சந்திக்கும் புது பிரச்சனை! இதெல்லாம் தேவையா?
டெல் அவிவ்: தங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஈரான் வீரியமான பதிலடியை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், ஈரான் வீசும் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இஸ்ரேல் புதிய பிரச்சனையை சந்திக்க தொடங்கியுள்ளது. ஏவுகணை தாக்குதலால் வெளியாகும் அதிர்ச்சி அலைகள் புதிய உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
பொதுவாக ஒரு இடத்தில் குண்டு வெடிப்பு நடந்தால், அந்த இடம் தடம் தெரியாமல் அழிந்துவிடும். ஆனால், பாதிக்கப்பட்ட பகுதிக்கு பக்கத்தில் இருக்கும் மற்றொரு பகுதியும் சில பாதிப்புகளை சந்திக்கும். இது இயல்புதான் என்றாலும், ஈரான் வீசும் குண்டுகள் இந்த துணை பாதிப்புகளின் வீரியத்தை அதிகரித்திருக்கின்றன.

அதாவது, ஈரானிடம் உள்ள சக்தி வாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் அதிக வெடி பொருட்களை சுமந்து தாக்குகின்றன. இது அதிர்வலைகளின் பாதிப்பை தீவிரப்படுத்துகிறது. 1,000 கி.கி வெடிபொருட்களுடன் தாக்கும் ஏவுகணைகள், அது விழுந்த இடத்தை சுற்றி 100 மீ சுற்றளவில் எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது. கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்து, உயிரிழப்புகள் 100% ஆக இருக்கிறது.
100 மீட்டரை தாண்டி, 100-500 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக சேதமடைகிறது. உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும், குண்டு வெடித்தவுடன் அதிலிருந்து வரும் அதிர்வலைகள் மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சி அலைகள் காது ஜவ்வுகளை கிழிக்கிறது. இதனால் செவித்திறன் இழப்பு, தலைச்சுற்றல் அல்லது காதுகளில் சத்தம் கேட்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறைந்த அழுத்தத்திலேயே காது ஜவ்வுகள் பாதிப்படைகின்றன.
அதேபோல அதிர்வு அலைகள், நுரையீரல்களில் தீவிர அழுத்தத்தை ஏற்படுத்தி, உள் இரத்தப்போக்கை உருவாக்கி நுரையீரல் சுருங்குதல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இது மிகவும் ஆபத்தான காயமாகும். தவிர, வயிற்றில் உள்ள காற்று மற்றும் திரவங்களுக்கிடையேயான தொடர்புள்ள இடங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. இது குடலில் உள் இரத்தப்போக்கு மற்றும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எலும்பு மற்றும் தசைகளும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு அடர்த்தி கொண்ட திசுக்களுக்கு இடையில் (எலும்பு மற்றும் தசை) அதிர்ச்சி அலைகள் அழுத்தத்தை ஏற்படுத்தி, காயங்களுக்கு உருவாக்குகிறது. இதெல்லாம் முதன்மை காயங்கள். இது தவிர, வெடிப்பினால் தூக்கி எறியப்படும் கண்ணாடித் துண்டுகள், உடைந்த மரத் துண்டுகள், உலோகத் துண்டுகள் உடலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்வு அலைகள் இதயத்தையும் பாதிப்பதால், இது உயிருக்கு ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
குண்டு வீச்சில் உயிர் பிழைத்தாலும் கூட, கடுமையான பதற்றம், பீதி, மனநலப் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துக்கொண்டே இருக்கிறது.
இதைத்தான் தற்போது இஸ்ரேல் மக்கள் எதிர்கொண்டிருக்கின்றனர். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சம், ஈரானின் வெடிகுண்டுகளை அதிக அளவில் தடுத்துவிடுவதால் உயிரிழப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
ஆனால், இதையும் மீறி தாக்கும் ஏவுகணைகள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இஸ்ரேல் எதிர்கொள்ளும் புதிய பிரச்சனையாக இது மாறியிருக்கிறது.
மேலே சொன்னது எல்லாம், குண்டு வெடித்த இடத்திலிருந்து 100-500 மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளாகும்.
500 மீட்டர் - 1-2 கிலோமீட்டர் வரை உள்ள மக்களுக்கும் குண்டு வெடிப்பின் பாதிப்பு இருக்கும். இவர்களுக்கும் காது ஜவ்வு கிழியும் அபாயமும், இன்ன பிற உடல்நல பாதிப்புகளும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications