இஸ்ரேலுக்கு கிலியை ஏற்படுத்திய ஈரானின் முடிவு! இனி அமெரிக்காவே வந்தாலும்.. அமைதி திரும்பாது!
தெஹ்ரான்: அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இருந்து ஈரான் விலகுவதாக தெரிவித்திருக்கிறது. அப்படி மட்டும் நடந்தால், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும். இந்த ஆயுதங்கள் மத்திய கிழக்கில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்.
இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 90% பேர் பொதுமக்கள் என்றும், 1,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், குண்டுவீச்சுத் தாக்குதல்கள் தொடரும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல் காரணமாக தெஹ்ரானிலிருந்து மக்கள் அலை அலையாக வெளியேறி வருகின்றனர்.

மறுபுறம் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 23 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 600 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. சர்வதேச நாடுகளுக்கு பெரிய மனுஷனாக செயல்படும் டிரம்ப், இப்பிரச்சனையை பேசி தீர்க்காமல், "சில நேரங்களில் அவர்கள் சண்டையிட்டுத்தான் ஆக வேண்டும்" என கூறியுள்ளார். பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது?
சூழல் இப்படி மாறியிருப்பதால், சண்டை இப்போதைக்கு நிற்கும் என்று தெரியவில்லை. இந்த தாக்குதல்களின் உச்சமாக ஒருவருக்கொருவர் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை குறிவைத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இப்படி எல்லா பக்கமும் இருந்து உந்தி தள்ளும் நெருக்கடியானது, ஈரானை புதிய முடிவை நோக்கி நகர்த்தியுள்ளது. அதாவது, 1968ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட NPT ஒப்பந்தத்திலிருந்து விலகுவது குறித்து, அந்நாட்டு நாடாளுமன்ற குழு ஒரு மசோதாவை ரெடி செய்து வருகிறது. ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் இது சம்பந்தமாக கூறுகையில்,
"NPTஒப்பந்தம் அணு ஆயுதங்களை கைவிடவும், கைவிடப்பட்டதை உறுதி செய்ய சர்வதேச நாடுகள் ஆய்வு நடத்தவும் வழிவகை செய்கிறது. பேரழிவு ஆயுதங்களை நாங்கள் உருவாக்க விரும்பவில்லை. உலகின் வேறு சில நாடுகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தாலும் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எங்கள் நாட்டில் உட்சபட்ச அதிகாரம் கொண்டிருக்கும் மதத் தலைவர் காமெனி கூட, இந்த ஆயுத உற்பத்திக்கு தடை விதித்துள்ளார். அதேநேரம், அணுசக்தி மற்றும் ஆராய்ச்சி உரிமையை ஈரான் தொடரும்" என கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில், இஸ்ரேல் மட்டுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அது NPT ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மறுபுறம் தனது ஆயுதக் களஞ்சியம் குறித்து வெளிப்படையாக எதையும் ஒப்புக்கொண்டதும் கிடையாது. இதனை அமெரிக்க உளவுத்துறை மற்றும் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புகளும் உறுதி செய்திருக்கின்றன. இப்படி ஒரு நாடு, ஈரானை குற்றம்சாட்டி, அந்நாட்டின் மீது போர்த் தொடுத்திருக்கிறது.
அணுசக்தி பயன்பாட்டில் யுரேனியம் மிக முக்கியமான தனிமமாகும். அணுமின் நிலையங்களுக்கு 3-5% செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப்படுகிறது. அணு ஆயுதங்களுக்கு 90% அல்லது அதற்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப்படுகிறது. ஈரான் யுரேனியத்தை 60% வரை செறிவூட்டியுள்ளது, இது ஆயுத தர நிலைக்கு மிக அருகில் உள்ளது. ஆனால், தங்களது மருத்துவ மற்றும் இதர தேவைகளுக்காகவே இந்த அளவு யுரேனியத்தை செறிவூட்டி வருவதாக ஈரான் விளக்கமளித்திருக்கிறது.
இந்த விளக்கத்தை எதையும், எருமை மாட்டின் மீது மழை பெய்த கதையாக, கண்டுக்கொள்ளாத இஸ்ரேல், ஈரான் மீது தீவிர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கிவிட்டால், அது மத்திய கிழக்கை முற்றிலுமாக அழித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications