பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்! ஈரான் வைத்த ஆப்பு! முடக்கப்படும் செங்கடல்?
டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படை நடவடிக்கைகள் தொடர்ந்தால் முக்கிய கடல் பாதைகளை முடக்கத் தயார் என்று ஈரான் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை முற்றுகை நீடித்தால் செங்கடல் பகுதியை முழுவதுமாக முடக்குவோம் என்று ஈரான் ராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு உலகளாவிய வர்த்தகம் மற்றும் எண்ணெய் போக்குவரத்துக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சமீபத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் எந்தத் தீர்வும் கிடைக்காமல் முடிந்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர், ஈரானைச் சுற்றிய கடல் பகுதிகளில் அமெரிக்க கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரானின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் கடல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செங்கடல் முடக்கம்
அமெரிக்க போர்க்கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையின் இருபுறங்களிலும் நிலைநிறுத்தப்பட்டன. இதனால் ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்கள் அந்தப் பகுதியில் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது. ஈரான் துறைமுகங்களில் இருந்து புறப்படும் அனைத்து கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும் என அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க கடற்படை நடவடிக்கைகள் ஈரானின் வர்த்தக கப்பல்களுக்கு இடையூறு விளைவித்தால், அதை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாக கருதுவோம் என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை
நாட்டின் இறையாண்மை மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க எந்த அளவிற்கும் செல்ல தயார் என்று அந்த நாட்டின் ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், இந்த முற்றுகை தொடர்ந்து நீடித்தால் முக்கிய கடல் பகுதிகளில் நடைபெறும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளை முழுமையாக தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் உலக வர்த்தகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் வழித்தடம்
குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பங்காற்றும் வளைகுடா நாடுகளுக்கு இது கடும் சவாலாக மாறும் வாய்ப்பு உள்ளது. முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, வளைகுடா பகுதிகளில் உள்ள சில முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால் அந்தப் பகுதியின் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் பதற்றமாக மாறியுள்ளது.
காஸா பகுதி
இதற்கிடையில், காஸா பகுதியில் நடைபெற்று வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செங்கடல் வழியாகச் சென்ற சில கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிகழ்வுகள் அனைத்தும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. நிபுணர்களின் கருத்துப்படி, செங்கடல் அல்லது அதனை ஒட்டிய கடல் வழித்தடங்கள் முடக்கப்பட்டால், உலகளவில் எண்ணெய் விலை திடீரென உயரக்கூடும்.
உலகளாவிய வர்த்தகம்
அதே நேரத்தில் பல நாடுகளின் பொருளாதாரத்திலும் அதிர்வுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக எண்ணெய் இறக்குமதியை அதிகமாக நம்பும் நாடுகளுக்கு இது பெரிய சவாலாக மாறும் என கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த பதற்றம் குறையாமல் நீடித்தால், அது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தையும் பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக மாறக் கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications