ஐ.எஸ். தீவிரவாதிகளை மணக்க சிறுமிகளுக்கு ட்விட்டர் மூலம் வலை வீசும் பெண்: உஷார்
டமாஸ்கஸ்: அண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த இங்கிலாந்து பெண் ஒருவர் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொள்ள ட்விட்டர் மூலம் சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை காட்டி வருகிறார்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அமெரிக்கா ஒரு பக்கம் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கென்ட் பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான சாலி ஜோன்ஸ்(45) என்பவர் அண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தார். அவர் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும் என ட்விட்டர் மூலம் பதின் வயது சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை காட்டி வருகிறார்.
சாலி அண்மையில் தான் இஸ்லாத்திற்கு மாறி தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார். இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சாலி ஜோன்ஸ் குற்றம் சாட்டப்பட்ட 20 வயது ஹேக்கரான ஜுனைத் ஹுசைன் மீது ஆன்லைன் மூலம் காதல் கொண்டார். இதையடுத்து அவர் சிரியா சென்று அங்குள்ள ரக்கா நகரில் வசித்து வருகிறார்.
தீவிரவாத அமைப்பில் சேர்ந்த சாலி கிறிஸ்துவர்களின் தலையை கூர்மையில்லாத கத்தியால் துண்டிக்க விரும்புவதாக தெரிவித்தார் என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீவிரவாதிகள் இருக்கும் பகுதிகளில் அமெரிக்கா தவிர ஈராக் மற்றும் குர்திஷ் படைகளும் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அழிப்பேன் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.