எல்லையில் பீரங்கிகளை குவிக்கும் இஸ்ரேல் ராணுவம்.. காசாவுக்குள் அனுப்ப திட்டம்? அலறி ஓடும் பொதுமக்கள்
டெல் அவிவ்: காசா பகுதியை இஸ்ரேல் சுற்றி வளைத்துள்ள நிலையில், அங்கே திடீரென பீரங்கிகளை இஸ்ரேல் குவித்து வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் போர் மேலும் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் படை திடீரென சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் சரமாரியாக ஏவப்பட்டது.

இதனால் இஸ்ரேல் நாட்டில் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறுகிய நேரத்தில் அதிகப்படியான ஏவுகணைகள் ஏவப்பட்டதால் இஸ்ரேலில் உள்ள பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் அமைப்பால் அதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
திடீர் தாக்குதல்: முதலில் இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன இஸ்ரேல், அடுத்துச் சுதாரித்துக் கொண்டு ஹமாஸ் படைக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. காசா பகுதியில் இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்தது. காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் காசா பகுதியில் இருக்கும் மக்கள் அச்சமடைந்து வெளியேறி வருகிறார்கள். இதற்கிடையே இப்போது காசா எல்லையில் நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது, தரைவழியாகத் தாக்குதல்கள் தீவிரமடையும் என்றே தெரிகிறது.
காசா எல்லையில் இஸ்ரேல் எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இஸ்ரேல் தனது முழு ராணுவத்துடன் காசா மீது படையெடுக்க வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே வடக்கு காசா பகுதியில் இருக்கும் 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மக்கள் தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
பீரங்கிகளைக் குவிக்கும் இஸ்ரேல்: இஸ்ரேல் ராணுவம் எல்லையில் பீரங்கிகளை வாங்கி குவித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் ராணுவம் ஆயிரம் வீரர்கள் தங்க ஏதுவாக காசாவுக்கு அருகிலேயே புதிய ராணுவ தளத்தையும் அமைத்துள்ளது. இங்கே ஒரே நேரத்தில் அதிகபட்ச வீரர்கள் தங்க முடியும். மேலும், இஸ்ரேல் ஏற்கனவே சுமார் 3 லட்சம் வீரர்களையும் திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இஸ்ரேல் மிக விரைவில் காசா மீது படையெடுக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறுகையில், "ஹமாஸ் படையிடம் இருந்து ஜனநாயகமாகத்தை பாதுகாக்கவே இந்த போரை நடத்த வேண்டி உள்ளது. நாங்கள் எங்கள் தாய் நாட்டிற்காகப் போராடுகிறோம். நாங்கள் எங்கள் எதிர்காலத்திற்காகப் போராடுகிறோம். இந்த பாதை நீண்டதாக இருக்கும், ஆனால் இறுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அமெரிக்கா: இதற்கிடையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேல் சென்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார், அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் இஸ்ரேலுக்கு இருக்கும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், ஹமாஸின் பிடியில் உள்ள அப்பாவி மக்களை விடுவிக்க இஸ்ரேலுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் காசா பகுதி மீது இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதலை நடத்த உள்ளது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இந்த போரால் ஏற்கனவே இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவம் முழு வீச்சில் படையெடுத்தால் பாதிப்புகள் மேலும் மோசமாக இருக்கும். இதனால் உயிரிழப்புகளும் கூட வெகுவாக உயரும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications