நண்பனை கைவிட்ட அமெரிக்கா? நெதன்யாகுவுக்கு எகிறிய பிரஷர்.. உச்சத்தில் மத்திய கிழக்கு பதற்றம்!
டெல் அவிவ்: மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதேநேரம் டிரம்பின் இந்த முயற்சிகள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் ஈரானுடன் அமெரிக்கா சமரசத்தை விரும்பும் அதேநேரம் மறுபுறம் நெதன்யாகு ஈரானுக்கு எதிரான போரைத் தொடர விரும்புகிறார். இந்த இரு தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தற்போது உலக அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வந்த மோதல் இப்போது தான் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே இன்று ஒரு வழியாக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இது மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முற்றுப்புள்ளியை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது இஸ்ரேலுக்கு கடும் அழுத்தத்தைக் கொடுப்பதாகவே இருக்கிறது.

அமெரிக்கா- இஸ்ரேல்
அதாவது ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைக் குறைத்து, ஈரானுடன் ஒரு விரிவான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புகிறார். இதற்காக மத்திய கிழக்கு நாடுகளை நிதானம் காக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவோ, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார். அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வது இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளது.
நெதன்யாகு
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு, ஜெருசலேமில் செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக முக்கியமானது என்று வர்ணித்தார். அவர் மேலும், "ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகளை நாங்கள் முடக்கினோம். பயங்கரவாதத் தலைவர்களை அழித்தோம். அணுசக்தி மையங்கள் மற்றும் ஏவுகணைத் தொழிற்சாலைகளைத் தகர்த்தோம். இதன் மூலம் இஸ்ரேல் அழியாமல் காப்பாற்றப்பட்டுள்ளது" என்றார். அதாவது போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், இஸ்ரேல் தனது ராணுவ வெற்றிகளை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்காது என்பதை நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.
உள்நாட்டிலும் பிரஷர்
நெதன்யாகுவுக்கு வெளிநாட்டு அழுத்தம் மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் கடும் நெருக்கடி நிலவுகிறது இஸ்ரேலில் 2026 அக்டோபருக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். நெதன்யாகு ஏற்கனவே டெல் அவிவ் நகரில் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இத்தனை காலம் போர் இருந்ததால்.. அது ஆளும் நெதன்யாகு அரசுக்குச் சாதகமான ஒரு இமேஜ்ஜை கொடுத்தது. போர் முடிந்துவிட்டால் உண்மையான பிரச்சினைகளை நெதன்யாகு சந்திக்க நேரிடும்.
இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட், நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்துள்ளார். "நெதன்யாகு இப்போது இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டு இருக்கிறார். இப்போது அவரிடம் இருப்பது இரண்டே இரண்டு ஆப்ஷன் தான். ஒன்று நமது சிறந்த நண்பனான அமெரிக்காவுடன் மோத வேண்டும்.. அல்லது இஸ்ரேலின் நலன்களை அடகு வைத்துவிட்டுச் சரணடைய வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்ப்பு
நெதன்யாகுவின் ஆட்சியில் இருக்கும் தீவிர வலதுசாரி அமைச்சர்களும் இந்த அமைதி ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். குறிப்பாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவிர், "டிரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது. இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒப்பந்தத்திலும் நாங்கள் பங்கெடுக்க மாட்டோம்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தினால் மட்டுமே போர்நிறுத்தத்திற்குச் சம்மதிப்போம் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. இது இஸ்ரேலில் உள்ள வலதுசாரிகளுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து என்ன
தற்போது நெதன்யாகு கத்தி மேல் நடக்கும் சூழலில் உள்ளார். ஒருபுறம் அமெரிக்காவின் அழுத்தம், மறுபுறம் தனது சொந்த அரசுக்குள் உள்ள அமைச்சர்களின் பிடிவாதம், இன்னொரு புறம் வரவிருக்கும் தேர்தல்.அமெரிக்கா விரும்பும் அமைதிப் பாதைக்கு இஸ்ரேல் திரும்புமா அல்லது தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடருமா என்பதுதான் இப்போது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications