"மாஸ்டர் பிரெய்ன்" சின்வார் காலி.. “இன்னும் வேலை முடியல.. ஹமாஸை அழிப்போம்” சபதம் எடுத்த நெதன்யாகு!
ஜெருசலேம்: "ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, வெறும் ஆரம்பம் மட்டுமே, எங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முழுமையடையவில்லை. மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்" என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸ் படையின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இவர் தான் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

சின்வாரின் தோற்றத்தில் இராணுவ பாணியில் உடை அணிந்த நபர், சிதைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், தலையில் காயத்துடன் இறந்து கிடந்த புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, "எங்கள் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை" என்று கூறியுள்ளார். சின்வாரின் கொலையை இந்தப் போரில் ஒரு முக்கிய தருணம் என்று குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, காசாவில் வசிப்பவர்கள், இறுதியாக ஹமாஸின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட இது ஒரு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
"காசாவில் இருந்து ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் சின்வாரின் மரணம் ஒரு அடையாளம். தீய சக்திகள் பலத்த அடியை சந்தித்துள்ள போதிலும், எங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முழுமையடையவில்லை. மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்" என்றும் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பவர்கள், ஆயுதங்களை தூக்கி எரிந்து விட்டு அவர்களை திருப்பி அனுப்ப அழைப்பு விடுத்ததோடு, அவ்வாறு செய்பவர்கள் வெளியே சென்று நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படுவார்கள், பணயக்கைதிகளுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாஹ்யா சின்வாரை கொன்ற இஸ்ரேலிய வீரர்களை பாராட்டிய அவர், காசாவில் இன்னும் பணயக்கைதிகளாக இருப்பவர்களின் குடும்பத்தினரிடம், "உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரும் வீடு திரும்பும் வரை முழு பலத்துடன் இஸ்ரேல் பணியை தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications