கொரோனா + ப்ளூ = ப்ளூரோனா.. புது காம்போ.. ஒன்றாக சேர்ந்து தாக்கும்.. இஸ்ரேலில் கர்ப்பிணி பாதிப்பு
டெல்அவிவ்: இஸ்ரேல் நாட்டில் 'ஃப்ளூரோனா' என்ற நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒரே நேரத்தில் ப்ளூ காய்ச்சல் மற்றும் கோவிட் வைரஸின் தொற்று ஒரு மனிதருக்கு ஏற்படுவதைத்தான் ஃப்ளூரோனா என்கிறார்கள்.
மத்திய இஸ்ரேலில் உள்ள பெட்டாச் டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட ஒரு பெண் இரு நோய்த்தொற்றுகளாலும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
அந்த தாய்க்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்றும் இருப்பினும் குணமடைந்து, வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாக் மேல் ஷாக்.. முதலில் பெரியவர்கள்.. அடுத்தடுத்து குழந்தைகள்.. கிலி தரும் தொற்று.. கதறும் வல்லரசு
ஆய்வாளர்கள்
இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் இன்னும் இந்த கேஸை ஆராய்ந்து வருகிறது, இரண்டு வைரஸ்களும் இணைந்து தாக்கும்போது அது, இன்னும் கடுமையான நோயை ஏற்படுத்துமா என்பதை இன்னும் ஆய்வாளர்கள் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை. கொரோனாவுக்கும், ப்ளூவுக்கும் இருக்கும் பொதுவான காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இந்த வகை நோய்க்கும் உள்ளன என்கிறார்கள் இஸ்ரேல் மருத்துவர்கள்.
மேலும் சில நோயாளிகள்
அவரோடு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட மேலும் சில நோயாளிகளும் இரண்டு வகை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகளால் நம்பப்படுகிறது, ஆனால் இன்னும் அது உறுதியாக கண்டறியப்படவில்லை.
புதுசா இருக்கே
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரும் மருத்துவமனையின் மகளிர் மருத்துவத் துறையின் இயக்குநருமான பேராசிரியர் அர்னான் விஜ்னிட்சர் கூறுகையில், "கடந்த ஆண்டு, கர்ப்பிணி அல்லது பிரசவிக்கும் பெண்களிடையே காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் போக்கு இல்லை. ஆனால், கொரோனா வைரஸ் மற்றும் ப்ளூ காய்ச்சல் இரண்டின் நிகழ்வுகளையும் நாங்கள் பார்க்கிறோம், அவை அதிகரிக்க தொடங்குகின்றன." என்று தெரிவித்தார்.
ஏன் இப்படி
அதிர்ஷ்டவசமாக, அந்த பெண் வழக்கத்திற்கு மாறாக கடுமையான நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படவில்லை என்பதையும் விஷ்னிட்சர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா கொடுமையே பெருங்கொடுமையாக உள்ள நிலையில், ப்ளூ காய்ச்சலும் சேர்ந்து கொண்டால் நிலைமை என்னவாகும் என்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. அது வழக்கத்தை விட அதிக வலுவான வைரசாக உள்ளது என்று பல மருத்துவர்களும் கூறுகிறார்கள். உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், கண் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். முன்பெல்லாம் மூன்று நாட்களில் குணமாகும் ப்ளூ காய்ச்சல் இப்போது 10 நாட்கள் கூட தொடர காரணம் வைரஸ் வலிமையானதுதான் என்கிறார்கள் மருத்துவர்கள். இதில் கொரோனா வைரஸ் பாதிப்பும் சேர்ந்த நோயாளிகள் நிலைமையை நினைத்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.