போருக்கு நடுவே திடீரென அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் அனுப்பிய மெசேஜ்! உற்று கவனிக்கும் ஈரான்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: ஹமாஸ் உடன் தொடங்கிய போர் இப்போது ஓராண்டைக் கடந்தும் தொடர்கிறது. இடையில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை உடனும் இஸ்ரேல் மோதலில் இறங்கியுள்ளது. இந்தச் சூழலில் இப்போது திடீரென இஸ்ரேல் தனது டோனை மாற்றி இருக்கிறது. அரபு நாடுகளுடன் சமாதானத்தை விரும்புவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் நாட்டிற்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்தாண்டு முதலில் போர் வெடித்தது.

israel middle east israel iran war

மத்திய கிழக்கு: இந்த போர் மாதக்கணக்கில் நீடித்த நிலையில், இதைக் கண்டித்து லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையேயும் மோதல் வெடித்தது. இடையில் இஸ்ரேல் ஈரான் இடையேயும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இப்படி மத்திய கிழக்கில் சில காலமாகவே பதற்றம் அதிகரித்துவிட்டது.

இந்தச் சூழலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் பேசிய நெதன்யாகு மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகவும் அரபு நாடுகளுடன் இணைந்து சமாதானமாகப் போக விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரபு நாடுகள்: இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இங்குள்ள அரபு நாடுகளுடன் சமாதானம் அடைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருந்தேன். அந்த செயல்முறையை மீண்டும் தொடர விரும்புகிறேன்" என்றார். அதாவது அரபு நாடுகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரகாம் உடன்படிக்கை என்றால் என்ன: ஆபிரகாம் உடன்படிக்கை என்பது இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த கடந்த 2020ல் கையெழுத்தான ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகே வளைகுடா நாடுகளான பஹ்ரைன், அமீரகம், மொராக்கோ, சூடான் ஆகியவை இஸ்ரேலுடன் முறையான உறவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய நெதன்யாகு, "மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். ஈரான் என்ற தீய நாட்டில் இருந்து மற்ற நாடுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எங்கள் உறுதி மற்றும் தைரியத்தால் அவர்கள் (மற்ற வளைகுடா நாடுகள்) ஈர்க்கப்படுகிறார்கள். எங்களைப் போலவே, அவர்களும் ஒரு நிலையான, பாதுகாப்பான, வளமான மத்திய கிழக்கை விரும்புகிறார்கள்" என்றார்.

சவுதி: கடந்த 2020இல் இஸ்ரேலுக்கும் இந்த அரபு நாடுகளுக்கும் கையெழுத்தான ஒப்பந்தம் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. அப்போதே சவுதி அரேபியாவையும் இந்த ஒப்பந்தத்தில் கொண்டு வர அமெரிக்கா முயன்றது. அப்படி சவுதி உள்ளே வந்தால் மத்திய கிழக்கில் பதற்றம் பெருமளவு குறையும் என்பதே அமெரிக்காவின் எண்ணம். இருப்பினும், சுதந்திர பாலஸ்தீன நாட்டை இஸ்ரேல் அங்கீகரித்தால் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்ததால் சவுதி அரேபியா இதில் கையெழுத்திடவில்லை.

இருப்பினும், கடந்தாண்டு எப்போது காசா மீது இஸ்ரேல் போரை ஆரம்பித்ததோ அப்போதே இந்த ஆபிரகாம் உடன்படிக்கை காலாவதியானதாகவே கருதப்பட்டது. அதேநேரம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளதால் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவும் வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் திடீரென ஓராண்டு கழித்து இஸ்ரேல் இது குறித்து மீண்டும் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+