பெரிதாக வெடிக்கும் போர்.. லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்.. அமெரிக்காவுக்கு போன மெசேஜ்
டெல் அவிவ்: இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து தரை வழி தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் இப்போது தரை வழி தாக்குதலைத் தொடங்குவது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது.

ஹிஸ்புல்லா: அதுவே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், திடீரென லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக லெபனானில் உள்ள பல இடங்களில் குண்டு மழை பொழிந்தது. ஏற்கனவே இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதை இரு தரப்பும் இதை ஏற்கனவே உறுதி செய்துள்ளது.
அடுத்த கட்டமாக மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தரை வழி தாக்குதலை மேற்கொள்ள இருக்கிறது. இதை இஸ்ரேல் தரப்பே தங்களிடம் தெரிவித்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.. இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே இஸ்ரேல் நடத்தி வந்த நிலையில், தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்குவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா தகவல்: இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "எல்லைக்கு அருகில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்ட தாக்குதலை நடத்துவதாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். அவை சிறியளவிலான தரை வழி தாக்குதலாக இருக்கும் என்பதே எங்கள் புரிதல்" என்றார்.
லெபனான் எல்லையில் இஸ்ரேல் வீரர்கள் ஏற்கனவே குவிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போதைய கள சூழலை வைத்துப் பார்க்கும் போது தரைவழி தாக்குதல் உடனடியாக தொடங்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களாக ஹிஸ்புல்லா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இப்போது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்க உள்ளது.
பதற்றம்: ஏற்கனவே ஹமாஸ், ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏமனில் உள்ள ஹவுதி படை மீதும் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றம் உலகப் போராக வெடிக்குமோ என்ற அச்சமும் பலரிடம் உள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வர அமெரிக்கா ஆதரவாகவே உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மில்லர் கூறினார். ராணுவ அழுத்தம் கூட சில சமயம் உதவும் என்ற போதிலும் அது எதிர்பாராத விளைவுகளுக்கும் வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது..
ஈரான்: இஸ்ரேல் இதுபோல பல திசைகளில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், நேரடியாக ஈரான் இதில் தலையிட வேண்டும் என்றும் குரல்களும் ஈரானில் எழுந்துள்ளது. இதுவரை இதில் ஈரான் நேரடியாகத் தலையிடாத நிலையில், அவர்கள் உள்ளே வந்தால் இது மிகப் பெரிய போராக வெடிக்கும் ஆபத்தும் உள்ளது.












Click it and Unblock the Notifications