காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் பிரதமர் சூளுரை!
காஸா: ஹமாஸ் இயக்கத்தினரை அழிப்பதற்காக பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரைத்துள்ளதால் அப்பகுதியில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீன இளைஞர் இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இருதரப்பினரும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் அனைத்து வகையான வான்வழித் தாக்குதல்களை இடைவிடாது நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினரும் ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தரை வழித் தாக்குதலையும் தீவிரப்படுத்துகிறது இஸ்ரேல். இதற்கு பதிலடியாக லெபனான் நாட்டு பகுதியில் இருந்தும் இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இருதரப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அப்பிராந்தியத்தில் மிகப் பெரிய போர் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், காஸா பகுதியில் எத்தனை பேர் பலியானாலும் கவலையில்லை. தொடர்ந்து தாக்குதலை நடத்துவோம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரைத்திருக்கிறார். இதனால் அங்கு பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.