ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 'BRICS' எதிர்வினை எப்படி இருக்கும்! இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானில் 'பிரிக்ஸ்' அமைப்பில் உள்ள நாடு. எனவே, பிரிக்ஸ் சார்பில் பதிலடி கொடுக்கப்படுமா? இந்த அமைப்பில் சீனியராக உள்ள இந்தியா இதை எப்படி அணுகும்? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
முதல் விஷயம், 'பிரிக்ஸ்' என்பது ராணுவ கூட்டமைப்பு கிடையாது. அதாவது 'நேட்டோ' மாதிரி, உறுப்பினர் நாடுகளை தாக்கினால், மற்ற நாடுகளும் உதவிக்கு வர வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. எனவே 'பிரிக்ஸ்' அமைப்பில் உள்ள இந்தியாவோ, சீனாவோ, ரஷ்யாவோ நேரடியாக ஈரானுக்காக இஸ்ரேலை தாக்காது.

உதாரணமாக உக்ரைன் போர்
ஆனால், பிரிக்ஸ் வேறு சில முக்கியமான வேலைகளை செய்யும். அதாவது போர் தொடர்பான உண்மைகளை பொது வெளியில் கொண்டு வந்து, அதை மக்களிடம் விவாதமாக மாற்றும். இதற்கு ரஷ்யா போரை உதாரணமாக சொல்லலாம். அமெரிக்காவும், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இப்படி மேற்கு உலகமே உக்ரைனுக்காக உருகிக்கொண்டிருந்த நேரத்தில், உக்ரைனுக்கு பின்னாடி அமெரிக்கா இருக்கிறது என்பதை சீனாவும், பிரேசிலும், தென்னாப்பிரிக்காவும் வெளிப்படையாக பேசின.
பிரிக்ஸ் நாடுகளின் உண்மை பிரச்சாரம்
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செய்த ஆயுத உதவி எவ்வளவு என்றும், இந்த போரை தூண்ட உக்ரைன் எந்த அளவுக்கு முக்கிய காரணம் வகித்தது என்றும் பிரிக்ஸ் நாடுகள் பொதுவெளியில் பேச தொடங்கின. இது ரஷ்யா பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து சொன்னது.
ஐநா மாதிரியான சர்வதேச அரங்கில் ரஷ்யா மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டபோது, பிரிக்ஸ் நாடுகளில் சில ரஷ்யாவுக்கு ஆதரவளித்தன, சில நடுநிலை வகித்தன. நடுநிலை வகித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவின் நிலைப்பாடு
சமீபத்தில் ஐநா சபையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், ரஷ்யாவை கண்டித்தும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்தியா, போர் நிறுத்தம் வேண்டும் என்றும், அமைதி மூலமாக மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் விலகிக்கொண்டது. சீனாவும், பிரேசில், தென்னாப்பிரிக்கா என இன்ன பிற பிரிக்ஸ் நாடுகளும் இதையேதான் செய்தன.
எனவே ஈரான் விஷயத்திலும் இந்தியா இந்த நிலைப்பாட்டைதான் மேற்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. அதாவது, ஈரானுக்கு இந்தியா ஆதரவளித்தாலும், ஆயுத உதவி உள்ளிட்டவற்றை செய்யாது. இருப்பினும் மனிதாபிமான உதவிகளை அனுப்பும். மேலும், போர் நிறுத்தம் வேண்டும் என்றும் குரல் கொடுக்கும்.
இஸ்ரேல் விஷயத்தில் இந்தியா
ஐநா சபையில் ஈரானுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காது. அதே சமயம் இஸ்ரேலை கண்டித்து ஈரான் வெளியிடும் அறிக்கைகளுக்கும் இந்தியா பெரிய அளவில் ஆதரவு தெரிவிக்காது.
ஏனெனில் இஸ்ரேல் பின்னால் அமெரிக்கா இருக்கிறது. இஸ்ரேலை பகைத்துக்கொள்வது என்பது அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாவதற்கு சமம். எனவே இஸ்ரேல்-ஈரான் விவகாரத்தில் இந்தியா முடிந்த அளவுக்கு தள்ளியே இருக்கும்.
மற்ற பிரிக்ஸ் நாடுகளின் நிலைப்பாடு
சீனா போன்ற மற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெளிப்படையாக ஈரானை வெளிப்படையாக ஆதரிக்கலாம். போர் நிறுத்தம் கோரியும், இஸ்ரேலை கண்டித்தும், ஏற்கெனவே பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்திருக்கும் அட்டூழியத்தை மேற்கோளிட்டும் ஐநா மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரிக்ஸ் நாடுகள் தீர்மானத்தை கொண்டு வரலாம். இப்படியான தீர்மானங்களிலிருந்தும் இந்தியா தள்ளியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications