பசி, தாகத்தால் சாவதை விட! தப்பிக்க முயன்று பலியானாலும் பரவாயில்ல! உக்ரைனில் இந்திய மாணவர்கள் கலக்கம்
கீவ்: ‛‛உணவு, குடிநீர் இல்லை. தொடர்ந்து குண்டுகள் வெடிக்கிறது. மீட்பதாய் கூறிய மத்திய அரசும் காலம் தாழ்த்துகிறது. பசி, தாகத்தால் இறப்பதை விட எல்லையை நோக்கி நடந்து சென்று உயிரிழந்து விடலாம்'' என உக்ரைன் சுமி நகரில் தவிக்கும் இந்திய மாணவர்கள் உருக்கமாக கூறியுள்ளனர்.
உக்ரைன் மீதான கோபம் இன்னும் ரஷ்யாவுக்கு குறையவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து 11வது நாளாக இன்றும் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மத்திய அரசு இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா மூலம் விமானங்களில் மீட்டு வருகிறது. இருப்பினும் உக்ரைன் தலைநகர் கீவ், சுமி நகரில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

சிரமத்தில் மாணவர்கள்
உக்ரைனில் இருந்து அவர்களால் தாயகம் திரும்ப முடியவில்லை. உயிரை காப்பாற்றி கொள்ள பதுங்கு குழிகளில் பதுங்கியுள்ளனர். சுமி நகரில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் உணவு, குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். தங்களது சிரமங்கள் குறித்து மாணவ-மாணவிகள் கூறியுள்ளனர். அதன் விபரம் வருமாறு:

வெடிக்கும் குண்டுகள்
ஜாரா அசான் என்பவர் கூறுகையில், ‛‛இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சமைக்க வழியில்லை. உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் இல்லை. ஒவ்வொரு நாளும் குண்டுவெடிப்புகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. நாங்கள் உள்ள பகுதியில் நுாறு மீட்டருக்கு அப்பால் குண்டுகள் வெடித்து சிதறுகின்றன. பயமாக உள்ளது. நான் உள்பட பல நண்பர்கள் மயங்கி விழுகிறோம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவில்லை. நாங்கள் இன்று மீட்கப்படுவதாக ஒரு தகவல் உள்ளது. ஆனால் அது அதிகாரப்பூர்வமானதாக இல்லை'' என அசான் கூறினார்'' என்றார்.

மீட்கவில்லையே
மற்றொரு மாணவர், ஹிதேஷ் குமார் குஜ்ஜார் கூறும்போது, ‛‛நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 3 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாணவர்கள் உயிரை காக்க பதுங்கு குழியிலேயே இருக்க வேண்டியுள்ளது. தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டது. பொதுமக்கள் வெளியேற மனிதாபிமான அடிப்படையில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால் எங்களை மத்திய அரசு மீட்கவில்லை. சிரமத்தை சந்தித்து வுருகிறோம். zரு லிட்டர் குடிநீர் மட்டுமே உள்ளது. 700 இந்திய மாணவர்கள் மட்டுமின்றி உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் நைஜீரியாவில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களும் உள்ளனர். எப்படி குடிநீர் போதுமானதாக இருக்கும்'' என்றார்.

இறந்தாலும் பரவாயில்லை
துஷ்யந்த் சிங் சிராவ் கூறுகையில், ‛‛மத்திய அரசு எங்களை இன்னும் மீட்கவில்லை. இதனால் நாங்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகிறோம். அருகேயுள்ள எல்லைக்கு நாங்கள் நடப்பதை தவிர வேறு வழியில்லை. பசி, தாகத்தால் இறப்பதை விட தப்பிக்க முயன்று இறந்தால் பரவாயில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது'' என்றார். முன்னதாக சிமியில் உள்ள இந்திய மாணவர்கள் தங்களை மீட்க மத்திய அரசுக்கு வீடியோ மூலம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications