"இதுதான் ஜப்பான்.." போருக்கு நடுவே தைரியமாக எடுத்த முடிவு.. உலக நாடுகள் கூட திணறுதே!
டோக்கியோ: மத்திய கிழக்கு மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் விலையுயர்வைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் ஜப்பான் அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் இப்போதைக்கு முடிவது போலத் தெரியவில்லை. இந்த மோதல் 4வது வாரமாகத் தொடர்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உலகெங்கும் உயர்ந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் சில குறிப்பிட்ட நாடுகளின் கப்பல்களை அனுமதிப்பதாக ஈரான் கூறினாலும், அங்குத் தெளிவு இல்லாத ஒரு சூழலே நிலவுகிறது.

ஜப்பான்
இப்படி ஒரு குழப்பம் நிலவி வரும் சூழலில், ஜப்பான் மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. விநியோக சங்கிலி பிரச்சனை காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதால் இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைக்க ஜப்பான் அரசு தனது கையிருப்பில் இருந்து 30 நாட்களுக்குத் தேவையான எண்ணெய்யை ரிலீஸ் செய்யத் தொடங்கியுள்ளது.
கையிருப்பு ரிலீஸ்
கடந்த திங்கட்கிழமை தனியார் துறை கையிருப்பில் இருந்து 15 நாட்களுக்கான எண்ணெய் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இப்போது மேலும் 30 நாள் கையிருப்பு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 11 சேமிப்பு மையங்களிலிருந்து மொத்தம் 8.5 மில்லியன் கிலோலிட்டர் எண்ணெய்யை விற்க அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மூன்று மத்திய கிழக்கு நாடுகள் ஜப்பானில் வைத்திருக்கும் கூட்டு இருப்பில் இருந்து ஐந்து நாட்களுக்குத் தேவையான எண்ணெய்யையும் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் டீலர்களுக்கு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஜப்பான் தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதத்திற்கும் மேலாக மத்திய கிழக்கைச் சார்ந்துள்ளது. பிப்ரவரி பிற்பகுதியில் மத்திய கிழக்கு மோதல் வெடித்ததை அடுத்து ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பான் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.. அதாவது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருப்பதால் பெட்ரோல், டீசல் பெட்ரோல் விலைகளில் கடுமையாக உயர்ந்து வருகிறது. அதைக் கட்டுக்குள் வைக்கவே ஜப்பான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மானியம்
இது மட்டுமின்றி, பெட்ரோல் விலையேற்றம் மக்களை நேரடியாகப் பாதிக்காமல் இருக்க பெட்ரோல் மானியங்களையும் ஜப்பான் அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியது. இதன் காரணமாக, கடந்த வாரம் லிட்டருக்கு 190.8 யென் என்று விற்கப்பட்ட பெட்ரோல் விலை இப்போது 177.7 யென் ஆகக் குறைந்துள்ளது. ஜப்பான் தனது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய 254 நாட்களுக்குப் போதுமான கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டிருந்தது. மறுபுறம் இந்தியாவிடம் இருக்கும் கையிருப்பு என்பது நமது முழு பயன்பாட்டில் அதிகபட்சமே ஒரு வாரம் மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள்
மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்களின் தாக்கம் பல உலக நாடுகளில் எதிரொலித்து வருகிறது. இதற்கிடையே பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ரோமால்தெஸ் மார்கோஸ், தனது நாட்டில் எரிபொருள் எமர்ஜென்சி நிலையை அறிவித்தார். ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஒர்க் ப்ரம் ஹோம் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications