ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே....ராஜினாமா...சரியும் பங்குச் சந்தை!!
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலம் பாதிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது மோசமான ஆரோக்கியத்தால் அரசு வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ நீண்ட காலமாக குடல் வீக்கம் மற்றும் அல்சர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு வயது 65. சமீப நாட்களில் இவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சுமார் எட்டு மணி நேரம் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

நடப்பு ஆட்சிக்காலம் வரும் 2021ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை இருக்கிறது. இந்த நிலையில் இன்று அவர் தானது ராஜினாமாவை அறிவித்து இருக்கிறார்.
ராஜினாமாவை அறிவித்த ஷின்சோ அபே அளித்த பேட்டியில், ''இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி நோயால் நான் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதற்கு மருந்து எடுத்துக் கொண்டு பணியாற்றி வந்தேன். ஆனால், நடப்பு மாதத்தின் மத்தியில் எனது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மிகவும் சோர்வாக காணப்பட்டேன். மீண்டும் இந்த நோயில் இருந்து நான் விடுபடவில்லை என்ற வருத்தமான செய்தி இந்த மாதத்தின் துவக்கத்தில் எனக்கு கிடைத்தது.
எனது உடல்நல பாதிப்பு அலுவல்களை பாதித்துவிடக் கூடாது என்பதால் பணியை ராஜினாமா செய்து இருக்கிறேன். அரசியலில் முக்கிய முடிவு எடுக்க வேண்டியது அவசியம். தவறான முடிவுகள் எடுத்து, நாட்டின் வளர்ச்சியை பாதித்துவிடக் கூடாது என்று கருதுகிறேன். மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை என்னால் சரிவர செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன்'' என்றார்.
- கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குடல் வீக்கம் மற்றும் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ஷின்சோ அபே. இந்த நோய் காரணமாக கடந்த முறை 2007ஆம் ஆண்டில் தனது பதவியை ஷின்சோ ராஜினாமா செய்து இருந்தார்
- தனது அமைச்சரவையில் ஊழல் மற்றும் அவரது ஆளும் கட்சிக்கு பெரும் தேர்தல் இழப்புக்கள் ஏற்பட்ட நிலையில், ஒரு வருடம் பதவியில் இருந்தபின் உடல்நலக்குறைவு காரணமாக 2007 ஆம் ஆண்டு திடீரென பிரதமர் பதவியை ஷின்சோ ராஜினாமா செய்தார்.
- இவரது பாதிப்புக்கு தகுந்த மருந்து முன்னர் கிடைக்காமல் இருந்தது. தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு வந்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மருந்து எடுத்துக் கொள்கிறார்.
- ஜப்பானில் மீண்டும் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதாகக் கூறி 2012ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
- ஜப்பானில் அதிக ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமை ஷின்சோவுக்கு உண்டு. இவரது உறவினர் இசாகு சாட்டோ 1964 முதல் 1972 வரை அந்த நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். இவரையும் ஷின்சோ பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
- கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் திறமையாக செயல்படவில்லை என்ற கருத்து ஜப்பானில் ஷின்சோவுக்கு எதிராக கிளம்பியுள்ளது. நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஷின்சோ அதிகமாக செலவிட்டுள்ளார்.
- கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மீடியாக்களில் செய்தி வெளியாகி வருகிறது.
ஷின்சோ ராஜினாமாவுக்கு பின்னர் மாற்றம்:
இவர் ராஜினாமா செய்துவிட்டதால், உள்துறை அமைச்சர் அனைத்து பொறுப்புக்களையும் ஏற்பார் என்று கூறப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றம் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அடுத்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 2021, அக்டோபரில் நடைபெற வேண்டும்.
ஷின்சோ ராஜினாமாவைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் பங்குச் சந்தை இன்று காலை ஒரு சதவீதம் இறங்கியது. மதியம் 1.5 சதவீதம் இறங்கியது. ஆனால், டாலருக்கு எதிரான ஜப்பான் நாணயமான யென்னின் மதிப்பு 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications