15,000 முறை போனில் அழைத்து அனத்திய பெண் கைது... இது ஜப்பானில்!
டோக்கியோ: ஜப்பானில் ஒரு பெண்ணைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கைதுக்குக் காரணம், அவசர போலீஸ் எண்ணில் கிட்டத்தட்ட 15,000 முறை தேவையில்லாமல் அழைத்து டார்ச்சர் செய்ததே.
கடை எப்ப சார் திறப்பீங்க.. சார் நீங்க வெறும் தாஸா. இல்லை லாடு லபக்கு தாஸா.. ரேஞ்சுக்கு கடந்த ஆறுமாதமாக இந்தப் பெண் போலீஸாருக்குப் போனைப் போட்டு தொல்லை கொடுத்து வந்தாராம்.
இதனால் கடுப்பாகிப் போன போலீஸார் அந்தப் பெண்ணின் வீட்டுக்கே போய் இப்படியெல்லாம் அடிக்கடி போன் செய்தால் கைது செயய் வேண்டி வரும் என்று பலமுறை எச்சரித்துப் பார்த்தனராம். இருந்தாலும் 44 வயதான அந்தப் பெண் கேட்பதாக தெரியவில்லை. தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்துள்ளார். இதையடுத்து தற்போது இவரைக் கைது செய்து விட்டனர். மேலும் அவருக்குக் கைவிலங்கு போட்டு அழைத்துப் போனார்கள்.
இதுகுறித்து சகாய் நகர காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரே நாளில் இப்பெண் 927 முறை போன் செய்துள்ளார். எங்களால் வேலையே பார்க்க முடியாத அளவுக்கு ஸ்தம்பிக்க வைத்து வந்தார்.
அவருக்கு மன நிலை சரியில்லாமல் இருக்குமோ என்று கூட சந்தேகித்தோம். ஆனால் அவர் நார்மலாகத்தான் இருக்கிறார். தேவையில்லாமல், அர்த்தமில்லாமல் சும்மா சும்மா போன் செய்து கொண்டே இருந்தார். எந்தக் காரணமும் இல்லாமல் போன் செய்வார்.
கிட்டத்தட்ட 60 முறை அவரது வீட்டுக்குப் போய் எச்சரித்து விட்டு வந்தோம். ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. இதையடுத்தே கைது செய்தோம் என்றார்.
அந்தப் பெண்ணுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 5000 டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிகிறது.