சந்தோஷமா இருந்தா வச்சுக்குவேன்.. இல்லாட்டி தூக்கிப் போட்டுருவேன்.. காதல் குறித்து லோபஸ்!
லாஸ் ஏஞ்சலெஸ்: காதலிக்கும் வரை சந்தோஷமாக இருப்பார்கள். சுதந்திரமாக இருப்பார்கள். ஆனால் காதலிக்க ஆரம்பித்ததும் பலரும் முதலில் மூழ்குவது அடுத்து என்ன என்ற பெரும் கவலையில்தான். காதல் சந்தோஷமாக திருமண பந்தத்தில் முடியும் வரை பலரும் பதட்டம், தவிப்பு, கோபம், சோகம், விரக்தி என்று விதம் விதமான கலவையில் மூழ்கி முக்குளித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் ஜெனீபர் லோபஸ் அதில் ரொம்பவே வித்தியாசப்படுகிறார். எதுக்குங்க இவ்வளவு கஷ்டமெல்லாம். என்னைப் பொறுத்தவரை காதல் என்றால் அதை சிம்பிளாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். ரொம்பவெல்லாம் நான் மெனக்கெடுவதில்லை, டென்ஷன் ஆவதில்லை என்று படு கூலாக கூறுகிறார் லோபஸ்.
பாடகி, நடிகை என பல அவதாரம் கொண்ட ஜெனீபர் லோலஸ் காதலுக்கும் பெயர் போனவர். அதேசமயம், காதலே கதி என்றும் கிடக்க மாட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், காதல் என்றால் நமக்கு சந்தோஷம் தர வேண்டும். அப்படித் தரும் வரைதான் அதற்கு மரியாதை. தராவிட்டால் தூக்கிப் போட்டு விட வேண்டும்.
நானும் அப்படித்தான் காதல் சந்தோஷமாக இருக்கும் வரை அதை வச்சுக்குவேன். இல்லாட்டி தூக்கிப் போட்டுருவேன் என்று சிரித்தபடி கூறுகிறார் லோபஸ். கடந்த 2014ம் ஆண்டுதான் காதல் கணவர் மார்க் அந்தோணியை விவாகரத்து செய்தார் லோபஸ். ஆனாலும் தனக்கும், அந்தோணிக்கும் இடையிலான இணைப்பை முழுமையாக துடைக்க முடியாது என்றும் லோபஸ் கூறுகிறார்.
நாங்கள் இருவரும் ஒன்றாக இல்லைதான். ஆனால் எனது இரு குழந்தைகளுக்கும் அவர்தான் தந்தை. அதை மாற்ற முடியாதே என்பது லோபஸ் தரும் விளக்கம்.