இதான் நம்ம பய புத்தி! 3 கோடி சம்பளம் வாங்கினாலும் 2100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வேலை இழந்த 24 ஊழியர்கள்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் உள்பட உயர் சம்பளம் வாங்கும் 24 பணியாளர்களை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பணி நீக்கம் செய்துள்ளது. வெறும் 2100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கோடிகளில் வாங்கிய சம்பளத்தை அவர்கள் இழந்துள்ளனர். மதிய உணவுக்காக வழங்கிய கூப்பனை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி அவர்களை மெட்டா நிறுவனம் வீட்டிற்கு அனுப்பியது விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கூகுள், பேஸ்புக், எக்ஸ் தளம், மைக்ரோசாப்ட் உள்பட உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சின்ன சின்ன விஷயங்களில் கூட ஊழியர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. அதேநேரம் தங்கள் ஊழியர்களுக்கு வேண்டிய அத்தனை சலுகைகளையும் அள்ளி அள்ளி வழங்குகின்றன. லட்சங்களில், கோடிகளில் சம்பளம் தரும் இந்நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு பரிசு கூப்பன்களை தருகின்றன. அமெரிக்கா தொடங்கி இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து என பல்வேறு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசு கூப்பன்களை அள்ளி தருகின்றன.

பரிசு கூப்பன்களை வாரி வழங்கி, சம்பளத்தையும் தொடர்ந்து வாரி வழங்கி வரும் இந்த நிறுவனங்கள் தான், கொஞ்ச நாளிலேயே வேலையைவிட்டு நீக்கவும் தயாராக இருக்கின்றன. சிக்கன நடவடிக்கைக்காக கடந்த சில ஆண்டுகளாக தங்களது ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்து வருகின்றன. அதேநேரம் இப்படி வேலையைவிட்டு அனுப்ப சின்ன சின்ன காரணங்களை கூட கூறுகின்றன. அதற்கு உதாரணம் தான் அமெரிக்காவில் மெட்டா நிறுவனம் இப்போது செய்திருப்பது.. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மெட்டா நிறுவனம் உணவு கூப்பனை தவறாக பயன்படுத்தியதாக 24 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
மெட்டா நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் மூன்று வேளையும் உணவு சாப்பிட உணவு கூப்பன்களை வழங்கி வருகிறது. அதன்படி, காலை உணவுக்கு 20 டாலர் என்றும், மதியம், இரவு உணவிற்கு என 50 டாலர் என்றும், ஆக மொத்தம் தினப்படி என 75 டாலர் வழங்குகிறது. அதாவது தோறாயமாக இந்திய மதிப்பில் ஒரு வேளை உணவுக்கு 21000 ரூபாய் தருகிறது. திருப்தியாக பிடித்த உணவுகளை சாப்பிடுங்கள் என அந்த கூப்பனை வழங்கி வருகிறது. ஆனால் இந்த கூப்பனை உணவுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறை வகுத்துள்ளது.
ஆனால் ஊழியர்கள் , மெட்டா அளித்த உணவு கூப்பனை, சாப்பாடு வாங்க பயன்படுத்தாமல், அன்றாட உபயோகப் பொருள்கள் வாங்க பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. உதாரணமாக மதிய உணவுக்காக தரப்பட்ட 2100 ரூபாய் கூப்பனில், பேஸ்ட், சோப்பு, ஒயின் கோப்பை உள்ளிட்ட பொருட்களை வாங்கி உள்ளார்கள். இப்படி பல அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வாங்கியதை கண்டுபிடித்த மெட்டா நிறுவனம், அவர்களை தொடர்ந்து எச்சரித்து வந்தது. ஆனால் எச்சரிக்கையை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட 24 ஊழியர்களை பணிநீக்கம் செய்து மெட்டா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இப்படி பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்கள் ஆவர். இதனிடையே மெட்டாவின் இந்த பணி நீக்க நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இப்படி சின்ன காரணங்களுக்காக பணி நீக்கம் செய்வது தவறு என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மெட்டா நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு 11,000 பேரை வேலையைவிட்டு அனுப்பியது. அதேபோல் கடந்த 2023ம் ஆண்டு 10,000 பேரை பணிநீக்கம் செய்தது. இந்த ஆண்டும் பணிநீக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications