யு.எஸ். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன் இலங்கை அதிபர் சிறிசேன சந்திப்பு
நியூயார்க்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆம் ஆண்டு கூட்டத் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கேமரூடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேற்று நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேசிவருகிறார். இந்நிலையில அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை மைத்ரிபால சிறிசேன நேற்று சந்தித்து பேசினார். அப்போது போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மைத்ரிபால சிறிசேனவின் வெளிவிவகார ஆலோசகரும் கிழக்கு மாகாண சபையின் ஆளுநருமான ஆஸ்ரின் பெர்னாண்டோ ஆகியோரும் உடனிருந்தனர்.