வாங்க தல.. எங்க கட்சியில சேருங்க.. எங்க நாட்டில் நீங்கதான் பேமஸ், பிரதமர் மோடியை அழைத்த பிரதமர்
கிளாஸ்கோ: 'நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்... வாருங்கள் எனது கட்சியில் இணைந்துகொள்ளுங்கள்' என்று இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் பிரதமர் நரேந்திர மோடியை கைகுலுக்கி அழைத்தார். இந்த சம்பவம் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில் நடந்தது.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.பருவநிலை மாற்ற உச்சிமாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட உலகின் பல்வேறு நாட்டு பிரதமர்கள், அதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த உச்சி மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.
மேல்மலையனூர் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து - சதுரகிரி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
கட்சியில் சேருங்கள்
இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி பேசிய இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட், 'நீங்கள் (நரேந்திரமோடி) இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்... வாருங்கள் எனது கட்சியில் இணைந்துகொள்ளுங்கள்' என்று அழைப்பு விடுத்தார் . இதனால், அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.
பிரதமர் மோடி
இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி ஆகியோர் நேற்று தான் முதல் முறையாக COP26 பருவநிலை உச்சிமாநாட்டின் போது சந்தித்தனர், இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை நெருக்கமாக்கும் வாய்ப்புகளை பரிசீலனை செய்தனர். மேலும் உயர் தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். திங்களன்று பருவநிலை உச்சி மாநாட்டின் போது சுருக்கமான உரையாடலுக்குப் பிறகு இருவரும் நேற்று முதல் முறையாக சந்தித்து கொண்டனர்.
70 ஆண்டுகளில் முதல்முறை
இந்தியா இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது . இரு நாடுகளும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் பல ஆண்டுகளாக நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. 2017 இல் இஸ்ரேலுக்கு பிரதமர் மோடியின் வரலாற்றுப் பயணத்தின் போது இருதரப்பு உறவுகள் இன்னும் நெருக்கமாகின. கடந்த 70 ஆண்டுகளில் இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யூத நாகரிகம்
முன்னதாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பென்னட் , "நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்திய நாகரிகம், யூத நாகரிகம் ஆகிய இரண்டு தனித்துவமான நாகரிகங்களுக்கிடையேயான ஆழமான உறவான இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை மீண்டும் தொடங்கியவர் நீங்கள். அது உங்கள் இதயத்திலிருந்து வந்தது என்று எனக்குத் தெரியும்" என்றார்.
நெதன்யாகு காலம்
தனக்கு முன்பு பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு காலத்தில் தொடங்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன் என்று இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமராக பதவியேற்ற பென்னட், உறுதி அளித்துள்ளார்.