கோகைன் உட்கொண்டு சிக்கிய பெல்ஜியம் ஜூடோ வீராங்கனை.. பதக்கம் பறிபோகிறது!
பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜூடோ வீராங்கனை சார்லின் வான் ஸ்னிக், ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.
இவர் லண்டனில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார். கடந்த ஆகஸ்ட் மாதம் ரியோ நகரில் நடந்த உலக ஜூடோ போட்டியில் இவர் பங்கேற்றார். அப்போது இவருக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடந்தது. அதில் பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.
இந்தப் போட்டியிலும் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சார்லின் கூறுகையில், நான் ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட கோகைன் போதைப் பொருளை உட்கொண்டதாக முடிவு வந்துள்ளது.
இது எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. காரணம், நான் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகள் குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பவள். அப்படி இருந்தும் எப்படி கோகைன் கலந்தது என்பது தெரியவில்லை. மிகவும் உடைந்து போயுள்ளேன்.
எனது திறனை அதிகரிக்க நான் ஒருபோதும் ஊக்க மருந்துகளை உட்கொள்வதில்லை. மேலும் வேண்டும் என்றே நான் ஒருபோதும் இதுபோல மருந்துகளை உட்கொண்டதில்லை என்றார்.
23 வயதாகும் இந்த ஜூடோ வீராங்கனைக்கு 2 ஆண்டுதடையும், பதக்கப் பறிப்பும் விரைவில் விதிக்கப்படும் என்று தெரிகிறது. பி சாம்பிள் சோதனை முடிவு வந்ததும் இந்த முடிவு அறிவிக்கப்படும்.