வளர்ந்த நாடுகளின் அலட்சியம்.. பின்தங்கிய நாடுகளை ஆபத்தில் தள்ளியுள்ளது.. கடும் கோபத்தில் WHO
ஜெனீவா: சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசி பணிகள் தோல்வியடைந்துள்ளதை விமர்சித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், உலகின் பணக்கார நாடுகளால் ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசிகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Recommended Video
உலகின் பல நாடுகளிலும் தடுப்பூசி பணிகள் தற்போது வேகமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும், அனைத்து நாடுகளுக்கும் தேவையான அளவு தடுப்பூசிகள் கிடைப்பதில்லை.
சில பணக்கார, அதிக வசதி கொண்ட நாடுகள் மட்டுமே அதிகப்படியான வேக்சின்களை வைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் பின்தங்கிய நாடுகளில் சுகாதார ஊழியர்களுக்குக் கூடத் தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடுகள்
அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் வைரஸ் பாதிப்பு கடந்த ஒரே வாரத்தில் 40% வரை அதிகரித்துள்ளது. டெல்டா கொரோனா வகை காரணமாகவே அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து சற்று தப்பியே இருந்த ஆப்பிரிக்க நாடுகள் இந்த முறையை மிகக் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

உலக சுகாதார மையம்
இந்நிலையில், இது குறித்து உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது நிலைமை மிக மோசமானதாக உள்ளது. சில வளர்ந்த நாடுகள் தங்கள் தடுப்பூசிகளைப் பின்தங்கிய நாடுகளுக்கு வழங்க மறுக்கின்றன. இதனால் ஆப்பிரிக்க நாடுகள் பெரும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளன.

கடமை தவறிவிட்டோம்
நமது உலகம் இதில் தோல்வியடைந்துவிட்டது. உலக சதயமாக நாம் அந்த நாடுகளைக் காக்கும் கடமையில் இருந்து தவறிவிட்டோம். கடந்த காலங்களிலும்கூட இந்த பணக்கார நாடுகள் இதே மனநிலையில் தான் நடந்து கொண்டன. தொடக்கக் காலத்தில் எச்.ஐ.வி / எய்ட்ஸுக்கு தேவைப்படும் சிக்கலான சிகிச்சை முறைகளையும் அவர்கள் தர மறுத்தனர் .

மிக மிக மோசமான செயல்
இப்போது நம்மிடம் இருப்பது விநியோக சிக்கல் தான். தடுப்பூசிகளை மட்டும் கொடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த கொரோனா தடுப்பூசி நமது உலகில் நிலவும் அநீதி, சமத்துவமின்மையை அம்பலப்படுத்தியுள்ளது. இதை நாம் எதிர்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். பெருந்தொற்றுக்கு மத்தியில் ஏழை நாடுகளுக்கு வேக்சின்களை வழங்காமல் இருப்பது மிக மிக மோசமான செயல் என்றும் அவர் விமர்சித்தார்.

சீரம் நிறுவனம்
ஏழை நாடுகளுக்கு வேக்சின்களை விநியோகம் செய்வதற்காக கோவாக்ஸ் என்ற திட்டத்தை உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்தது. இதுவரை 9 கோடி வேக்சின்கள் இந்தத் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே இந்த முன்னெடுப்பிற்குத் தேவையான வேக்சின்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சீரம், அமெரிக்காவின் ஜான்சன் நிறுவனங்கள் வேக்சின் வழங்கவில்லை என்றும் இதுதான் போதிய தடுப்பூசி கிடைக்காமல் போக முக்கிய காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications