அமெரிக்காவில் சக ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய ஊழியர் - 4 பேர் பரிதாப பலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் திடீரென்று கண்மூடித்தனமாக சுட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய மேற்கு அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கன்ஸாஸ் சிட்டியில் புற்களை வெட்டி, தோட்டத்தை சமன்படுத்தும் இயந்திரங்களை தயாரிக்கும் எக்ஸெல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் பெயிண்டராக வேலைசெய்துவந்த செட்ரிக் ஃபோர்ட் என்பவர் ஏ.கே.47 மற்றும் கைத்துப்பாக்கியால் சகத்தொழிலாளிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். எதிர்பாராதவிதமான இந்த கொடுமையான தாக்குதலில் 4 தொழிலாளர்கள் குண்டுபாய்ந்து உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், செட்ரிக் ஃபோர்டை சரணடையும்படி கேட்டுக் கொண்டனர். அவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட முயன்றதால் செட்ரிக் ஃபோர்ட் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் காயமடைந்த சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.