ஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா
இந்தியர் ஒருவரால் சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்துள்ளது
துபாய்: வேலை தேடி விண்ணப்பித்த கேரள என்ஜீனியருக்கு துவேஷமாக பதிலளித்த இந்தியரால் சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஷாஹீன்பாக் போராட்டக் களமாக தகித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை மாதமாக இங்கு சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. நேற்று கூட குடியரசு தின விழாவையொட்டி ரோஹித் வெமுலாவின் தாயார், ஜூனைத் கானின் தாயார் மற்றும் சில மூதாட்டிகளை வைத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து தங்களது தேச பக்தியையும் இங்கு போராட்டக்காரர்கள் காட்டினர்.
ஆனால் பாஜக உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்கள் ஷாஹீன்பாக்கை குட்டி பாகிஸ்தான் என்று வர்ணித்தும் விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில் வேலை கேட்டு விண்ணப்பம் அனுப்பிய கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய என்ஜீனியர் ஒருவருக்கு குதர்க்கமாக பதிலளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் துபாய் நிறுவனத்தைச் சேர்ந்த இந்து சமூகத்தைச் சேர்ந்த இந்தியர் ஒருவர்.
அதாவது கேரளாவைச் சேர்ந்தவர் எஸ்எஸ் அப்துல்லா.. 23 வயதாகும் இளைஞர்.. மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ளார். இவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை கோரி விண்ணப்பத்தை இமெயிலில் அனுப்பியிருந்தார். இந்த மெயிலை துபாயில் உள்ள வேலைவாய்ப்பு கன்சல்டன்சி நிறுவனத்திற்கு அனுப்பியிருந்தார். அதற்கு அங்கிருந்து ஜெயந்த் கோகலே என்பவர் ரிப்ளை அனுப்பியுள்ளார்.
அந்த மெயிலில் கோகலே இப்படிக் கூறியுள்ளார், "எனக்கு ஒன்று தோன்றுகிறது. உங்களுக்கு எதுக்கு வேலை? பேசாம டெல்லிக்குப் போங்க. ஷாஹீன்பாக் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்க. தினசரி ரூ. 1000 காசு தருவாங்க. கூடவே இலவசமாக பிரியாணி போடுவாங்க. கணக்கே இல்லாமல் டீ பால் கூட கிடைக்கும். சில நேரம் ஸ்வீட்ஸ் கூட கிடைக்கும்" என்று கோகலே கூறியுள்ளார். இதைப் பார்த்து அப்துல்லா அதிர்ச்சி அடைந்து விட்டார்.
செர்னோபில் அணு விபத்துக்கு இணையானது.. சீனா எதையோ மறைக்கிறது.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!
இந்த மெயிலை தனது நண்பர்கள் சிலருக்கு அனுப்பி வேதனைப்பட்டுள்ளார் அப்துல்லா. அவர்கள் இதை சமூக வலைத்தளங்களில் பரப்பி கோகலேவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்க இப்போது இது பெரும் சர்ச்சையாகி வைரலாகியுள்ளது. இந்த மெயில் மிகவும் கண்டனத்துக்குரியது. 2 விஷயங்களில் கோகலே தவறு செய்துள்ளார்.. வேலை கேட்ட ஒருவரை அவரது மத அடிப்படையில் இழிவுபடுத்தியுள்ளார். 2வது ஷாஹீன்பாக் போராட்டத்தையும் அவர் இழிவுபடுத்தியுள்ளார் என்று கண்டனங்கள் குவிகின்றன.
இதுகுறித்து அப்துல்லா கூறுகையில், " இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வேலை கிடைத்தால் போதும்.. எந்த சர்ச்சையையும் நான் விரும்பவில்லை" என்று அப்துல்லா கூறியுள்ளார். ஆனால் கோகலே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறுபக்கம் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. என்ன இருந்தாலும் அவரது பதில் தவறானது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
இந்த மேட்டர் குறித்து கோகலே கல்ப் நியூஸ் செய்தி தளத்திற்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், " எனக்கு உடம்பு சரியில்லை, டயாலசிஸ் சிகிச்சையில் உள்ளேன். எனது மெயிலை தவறாக புரிந்து கொண்டு விட்டனர். நான் தவறாக எதையும் சொல்லவில்லை. யாரையும் புண்படுத்தும் நோக்கில் நான் அதை அனுப்பவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அப்துல்லாவுக்கு நான் மன்னிப்புகேட்டு மெயிலும் அனுப்பி விட்டேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் கோகலே கூறுகையில், " நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பன்முகத்தன்மையை மதிக்கிறேன். அதன் கலாச்சாரம், அரசியலை நான் மதிக்கிறேன். உண்மையில் உடம்புக்கு முடியாமல் உள்ள என்னை நன்றாகவே இங்குள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனவே இந்த உணர்வுகளை நான் புண்படுத்தும் வகையில் நான் செயல்பட மாட்டேன்" என்றும் கூறியுள்ளார் கோகலே.
எதற்காக குதர்க்கமாக பேச வேண்டும், பிறகு மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த நாட்டில் இருந்தாலும் சரி, ஊரில் இருந்தாலும் சரி.. அனைவரையும் மதித்து, சகோதரத்துவத்துடன் செயல்பட்டாலே போதுமே பிரச்சினைகளே வராது. இதை என்று நாம் புரிந்து கொள்ளப் போகிறோமோ.