வங்கதேசம் கலவரம் 3 பேர் பலி: இந்தியாவுக்கு இடம் மாறும் டி-20 கிரிக்கெட்
டாக்கா: வங்கதேசத்தில் எதிர்கட்சிகளின் முழு அடைப்புப் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது. பல இடங்களில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. வங்காள தேச பாராளுமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும். இடைக்கால அரசை உருவாக்கி தேர்தலை நடத்த வேண்டும் என அங்குள்ள எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

தொடர் முழு அடைப்பு
இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய தொடர் முழு அடைப்புக்கு 18-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன. இந்த முழு அடைப்பு இன்று 4-வது நாளை எட்டியுள்ள நிலையில் வங்காள தேசத்தின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டங்கள் தலை விரித்தாடின.
வெடிகுண்டு வீச்சு
தலைநகர் டாக்காவில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட், செஷன்ஸ் கோர்ட் ஆகியவற்றின் மீது இன்று சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல், டாக்கா நகர போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்தின் மீதும் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் கோர்ட் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.
தீவைப்பு
சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்களையும், கார்களையும் கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கலவரம் நீடித்து வருகிறது. கலவரப் பகுதிகளில் ஏராளமான ராணுவ வீரர்களூம், போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் துப்பாக்கிச்சூடு
சத்கிரா என்ற பகுதியில் கலவரக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் வெடித்த மோதலில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பலியானார். இதேபோல், சிராஜ்கஞ்ச் பகுதியில் லாரியில் இருந்த சரக்குகளை கொள்ளையடிக்க முயன்றவர்களின் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
டி-20 கிரிக்கெட் போட்டி
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஐ.சி.சி.யின் மிகப்பெரிய இந்த கிரிக்கெட் தொடரின் போட்டிகள் மிர்பூர், சிட்டகாங் மற்றும் சில்ஹெட் ஆகிய மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பில் சிக்கல்
இந்நிலையில், வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பம், பாதுகாப்பு பிரச்சினை போன்ற காரணங்களால் உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவுக்கு மாற்ற தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா, ஜார்கண்ட்
இந்தியாவில் இதற்காக கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானம், ஜார்க்கண்டின் ராஞ்சி மைதானம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
பாகிஸ்தான் மிரட்டல்
மேற்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டாக்காவில் அந்த வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியில் குண்டுவெடித்தது. இதையடுத்து நிலைமையை தீவிரமாக கண்காணித்து வரும் ஐ.சி.சி., வீரர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது. அதேசமயம், வங்கதேசத்தில் போட்டி நடந்தால் அதை புறக்கணிப்பதாக பாகிஸ்தானும் மிரட்டி வருகிறது. எனவே, போட்டியை இந்தியாவுக்கு மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம்.
ஆலோசனையில் முடிவு
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்காவில் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது, உலகக்கோப்பை போட்டிகளை வங்கதேசத்தில் நடத்துவதா, இந்தியாவுக்கு மாற்றுவதா? என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications