எனக்கு வாடகை தான் முக்கியம்! ஹமாஸிடம் பிணை கைதியாக சிக்கிய பெண்ணை மிரட்டிய இஸ்ரேல் ஹவுஸ் ஓனர்
டெல் அவிவ்: இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இளம்பெண்ணின் வீட்டு உரிமையாளர், வாடகைதான் தனக்கு முக்கியம் என்றும் இல்லையென்றால் வீட்டை காலி செய்யுமாறு பெண்ணின் நண்பருக்கு மெசேஜ் அனுப்பி கெடுபிடி காட்டினாரம். இது குறித்த செய்தியை இங்கே பார்க்கலாம்.
இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் தேதி திடீரென ஏவுகணைகளை வீசி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்க தொடங்கியது. தற்போது ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டியே தீருவோம் என சூளுரைத்துள்ள இஸ்ரேல், காசா மீது உக்கிரமாக தாக்கி வருகிறது. முன்னதாக கடந்த 7 ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றின் மீது ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர்.

ரேவ் பார்ட்டி நடந்து கொண்டு இருந்த போது ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதில் 27 வயதான இன்பர் ஹமன் என்ற இளம்பெண்ணும் அடங்குவார். இஸ்ரேலில் மேற்படிப்புக்காக வாடகைக்கு தனது ஆண் நண்பரான நோம் அல்லான் என்பவருடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்பர் ஹைமன் வசித்து வந்தார்.
வீட்டு வாடகை கேட்டு: தற்போது இன்பர் ஹமனை பிணைக்கைதியாக ஹமாஸ் பிடித்து வைத்து இருப்பதால், கடந்த மாதத்திற்கான வீட்டு வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டு வாடகை வராததால் நோம் அல்லானுக்கு மெசேஜ் அனுப்பிய வீட்டு உரிமையாளர், வாடகையை செலுத்துமாறு கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த நோம் நடந்த விஷயத்தை தெளிவு படுத்தியுள்ளார்.
அதாவது தனது ரூம் மெட் தற்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த வீட்டு உரிமையாளரோ, வேறு இடத்தை தேடிக்கொள்ளுங்கள். 2,500 சேக்கல்(இஸ்ரேல் பணம்) நீங்கள் தரவேண்டியுள்ளது. நீங்கள் வாடகைக்கு இருப்பதால் எனக்கு எந்த பயனும் இல்லை. எனவே, வீட்டை காலி செய்யுங்கள். வீட்டை காலி செய்வது குறித்து அவருடைய பெற்றோரிடம் பேசுங்கள்" என்று கறாராக சொல்லிவிட்டாராம்.
என் வாழ்நாளில்: இது குறித்த உரையாடலை தனது சோஷியல் மீடியாவில் அல்லான் - இன் தந்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் எனக்கு தற்போது 52 வயது ஆகிறது. என் வாழ்நாளில் இதுநாள் வரை இப்படி ஒரு நபரை எதிர்கொண்டது இல்லை என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார். மேலும், பிற அபார்ட்மண்ட் உரிமையாளர்கள் இப்படி நடந்து கொள்வதற்கு முன்பாக இரு முறை யோசிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இதை பதிவிட்டுள்ளேன்.

அந்த வீட்டு உரிமையாளர் மன்னிப்பு கேட்க நேரம் வேண்டும் என்பதற்காக நான் வேண்டும் என்றே அவரது பெயரையும் போன் நம்பரையும் பதிவிடவில்லை" என்று பதிவிட்டுள்ளார். ஆனால், நான் அப்படி பணம் எதையும் கேட்கவில்லை என்று வீட்டு உரிமையாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆரோன் ரெயிஸ் என்ற அந்த வீட்டு உரிமையாளர் கூறுகையில், 'அந்த பெண்ணின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அவர் பத்திரமாக இஸ்ரேல் திரும்ப வேண்டும் என்றே அவர்களது பெற்றோரை போல நானும் விரும்புக்றேன்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications