இப்படை தோற்பின் எப்படை வெல்லும்... விவசாயிகளுக்காக லாஸ் வேகாஸில் திரண்ட தமிழர்கள்!
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் திரண்ட தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
லாஸ் வேகாஸ்: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அங்கு வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 28வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பிரதமர் மோடி இதுவரை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இப்படை தோற்பின் எப்படை வெல்லும் என்பது போல் லாஸ் வேகாஸில் திரண்ட தமிழ் மக்கள் விவசாயிகளுக்காக தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் பலதிட்டங்கள் பற்றி லாஸ்வேகாஸ் தமிழ்ச்சங்கத்தில் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக விவசாயம் பற்றிய விழிப்புணவு, நீர்வளம், நிலவளம், நஞ்சை, புஞ்சை, ரசாயனமற்றசாகுபடி, சொட்டுநீர் பாசனம் மற்றும் விவசாயிகள் பொருளுதவி திரட்டல் பற்றி லாஸ் வேகாஸ் தமிழ் மக்கள் தங்கள் கருத்தினை போராட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்.
உழவினார் கைம்மடங்கின் இல்லைவிழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை.
என்ற திருக்குறளையும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தின் போது தமிழ் மக்கள் தெரிவித்தனர். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.