பாரீஸில் தீவிரவாதியிடம் இருந்து மக்களை காத்த மாலி முஸ்லீமுக்கு பிரெஞ்சு குடியுரிமை
பாரீஸ்: பாரீஸில் உள்ள கோஷர் சூப்பர்மார்க்கெட்டுக்குள் தீவிரவாதி புகுந்து பலரை பிணையக் கைதிகளாக பிடித்த போது மக்களின் உயிரை காப்பாற்றிய மாலியைச் சேர்ந்த லஸானா பாதிலிக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் கடந்த 9ம் தேதி புகுந்த தீவிரவாதியான அமேதி கவ்லிபாலி பலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். மேலும் அதில் 4 பேரை சுட்டுக் கொன்றார். அப்போது கடையின் அடித்தளத்தில் உள்ள குளிர்பதனமூட்டும் அறையில் இருந்த கடை ஊழியரான மாலியைச் சேர்ந்த முஸ்லீம் நபர் லஸானா பாதிலி(24) அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு வாடிக்கையாளர்கள் ஒளிந்து கொள்ள வசதி செய்தார். பின்னர் அவர் கடையில் இருந்து தப்பிச் சென்று போலீசாரை அழைத்து வந்தார்.
போலீசார் அமேதியை சுட்டுக் கொன்று 15 பிணையக் கைதிகளை மீட்டனர். கடையில் இருந்த மக்களை காப்பாற்றிய லஸானாவின் வீரத்தை பாராட்டி பிரான்ஸ் அரசு அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கி பாராட்டியுள்ளது.
பாரீஸில் நடந்த விழாவில் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. அந்த விழாவில் அந்நாட்டு பிரதமர் மானுவல் வால்ஸ் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய லஸானா கூறுகையில்,
எனக்கு பெருமையாக உள்ளது. நான் ஹீரோ எல்லாம் கிடையாது. நான் லஸானா. எனக்கு நான் உண்மையாக உள்ளேன். அனைவரும் எனக்கு சமம். தோலின் நிறம் எனக்கு முக்கியம் இல்லை. மனித உரிமைகளின் நாடு பிரான்ஸ் என்றார்.
2006ம் ஆண்டில் இருந்து பிரான்சில் வசித்து வரும் லஸானா குடியுரிமை கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பிதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.