எழுதி அனுப்பி... 145 வருடத்திற்குப் பிறகு வந்து சேர்ந்த கடிதம்!
சிட்னி: பிரான்ஸ் -பிரஷ்ய போர் சமயத்தில் பலூன் மூலமாக அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று, சுமார் 145 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது.
கடந்த 1870ம் ஆண்டுவாக்கில் பிரான்ஸ்-பிரஷ்யா போர் நடைபெற்றது. அப்போது சுமார் நான்கு மாதங்கள் ஜெர்மனி பாரீசை சுற்றி வளைத்திருந்ததால், அங்கிருந்த மக்கள் தங்கள் உறவினர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது கடினமாக இருந்தது.

எனவே, மக்கள் தங்கள் உறவினர்களுக்கு எழுதும் கடிதங்களை ஹாட் பலூனில் வைத்து, வானில் இருந்து தூவி வந்துள்ளனர்.
அந்தவகையில், அப்போது சார்லஸ் என்ற நபர் தனது தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம் தற்போது ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது.
அக்கடிதத்தில் தான் ஆரோக்கியமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சார்லஸ், ‘நாங்கள் தினந்தோறும் இறைச்சி சாப்பிடுவதில்லை. அதற்காக இறைச்சி கிடைப்பதில்லை என அர்த்தமில்லை. ஆனால், அது குறித்து குடும்பத்தில் யாரும் புகார் தெரிவிப்பதில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போர் விபரங்கள் குறித்தும் அக்கடிதத்தில் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார். அதாவது பிரஷ்யா நாட்டவர்கள் ஆயிரம் பேரை கைது செய்துள்ளதாகவும், குண்டுகள் பலவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியும் இந்தப் போரில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் அக்கடிதத்தில் சார்லஸ் நம்பிக்கையுடன் எழுதியுள்ளார்.
ஆனால், நிஜத்தில் சார்லஸின் நம்பிக்கை ஜெயிக்கவில்லை. மாறாக அந்தப் போரில் பிரஷ்யாவே ஜெயித்தது.












Click it and Unblock the Notifications