Russia Earthquake: ரஷ்யாவில் 8.0 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த மக்கள்! சுனாமி எச்சரிக்கை
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (ஜூலை 30) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சாட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோ மீட்டர் ஆழத்தில் 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம், இந்த நிலநடுக்கம் காலை 8:25 மணிக்கு ஏற்பட்டதாகவும், முதற்கட்டமாக 8.0 ரிக்டர் அளவில் பதிவாகியதாகவும் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில், பலரும் பயந்து அலறி அடித்து வீடுகளை விட்டு தெருக்களில் ஓடினர். வீடுகளுக்குள் இருந்த அலமாரிகள் கவிழ்ந்தன, கண்ணாடிகள் உடைந்தன, கார்கள் தெருவில் ஆடின.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹவாய் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடல் அலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடற்கரைக்கு அருகில் உள்ளவர்கள் உடனடியாக ஹொக்கைடோவிலிருந்து வகயாமா மாகாணம் வரை சுனாமி எச்சரிக்கையால் சூழப்பட்ட பகுதிகளில் உள்ள உயரமான தரை அல்லது பாதுகாப்பான கட்டிடங்களுக்கு வெளியேற வேண்டும்" என்று தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி அறிவுறுத்தி உள்ளார்.
பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியின் ஒரு பகுதியான ஜப்பான், உலகின் மிகவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். ஜூலை மாத தொடக்கத்தில், கம்சட்கா அருகே கடலில் ஐந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் - 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications