லண்டனில் திகு திகுவென எரியும் 24 அடுக்குமாடி....6 பேர் பலி; 50 பேர் படுகாயம்!
லண்டனில் பற்றி எரியும் 24 மாடி கட்டட விபத்தில் சுமார் 6 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் : லண்டனின் வடக்கு கென்சிங்ஸ்டன் பகுதியில் உள்ள கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல்கருகி உயிரிழந்த நிலையில் 50 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு லண்டனின் கிரென்ஃபெல் டவர் 24 அடுக்குமாடிகளைக் கொண்டது. விண்ணை முட்டும் உயரத்தில் இருக்கும் இந்த கட்டடத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் 1 மணியளவில் 2வது தளத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து எளிதில் 24 மாடி முழுமைக்கும் மளமளவென பரவியது. தீயை பார்த்து பதறிய குடியிருப்பு வாசிகள் கரும்புகை மற்றும் தீக்கு மத்தியில் குழந்தைகளுடன் வெளியேறினர்.
ஒரு தளத்திற்கு 5 வீடுகள் வீதம் 120 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் சுமார் 500 பேர் வரை வசிக்கலாம் என்று தெரிகிறது.

அங்கேயும் விதிமீறலா?
1974ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடம் கடந்த ஆண்டு ரூ.90 கோடி மதிப்பில் மறுபுனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்எச்சரிக்கை வசதிகள் குறித்து ஏற்கனவே லண்டன் பத்திரிக்கைகள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளன.

உதவிஎண் அறிவிப்பு
தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதனிடையே தொடர்ந்து எரியும் தீயால் அதிர்ச்சியடைந்தவர்கள், அந்த அடுக்குமாடியில் குடியிருந்தவர்களின் நிலை குறித்து தகவல் கேட்டு வருகின்றனர். இவர்களின் வசதிக்காக லண்டன் மேயர் சாதிக் கான் சிறப்பு அவசர கால உதவி எண்ணை அறிவித்துள்ளார்.

50 பேர் அனுமதி
இந்நிலையில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே எத்தனை பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் தெரிய வரும். எனினும் முதற்கட்ட தகவல்படி 6 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை தீக்காயங்களுடன் சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
அப்புறப்படுத்தல்
விடாமல் எரிந்து வரும் 24 மாடி கட்டடம் எந்த நேரம் இடிந்து விழக்கூடும் என்ற நிலையில் உள்ளது. தற்போது பாதுகாப்பு கருதி அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications