அண்டார்டிகாவுக்கு கடத்தப்பட்டதா மலேசிய விமானம்? பரபரப்பு தகவல்கள்
கோலாலம்பூர்: கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் அண்டார்டிகாவுக்கு கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.
அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாகத் தெரியவரவில்லை.
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. மாயமான விமானத்தை 11 மாதங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறை.
அண்டார்டிகாவுக்கு
இந்த நிலையில், மாயமான மலேசிய விமானம், அண்டார்டிகாவுக்கு செலுத்தப்பட்டதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3-வது திருப்பத்தின்படி அண்டார்டிகா நோக்கி அந்த விமானம் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே...
இதுபற்றி பிரபல விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்று உறுதியாக கூறினார்.
அமெரிக்க - தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டு போர் பயிற்சியின்போது மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
அமெரிக்கா கடத்தியதா?
மலேசிய விமானத்தை வெகு தொலைவில் உள்ள தனது விமானப் படைத்தளமான டிகோ கார்சியாவில் கட்டாயப்படுத்தி அமெரிக்கா தரை இறக்கியதாக மற்றொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
மறுப்பு
இதை மலேசியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது. இதுபற்றி மலேசியாவுக்கான அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘இந்த ஊகத்தில் எந்த உண்மையும் கிடையாது. எம்.எச்.370 விமானம் மாலத்தீவு அருகிலோ, டிகோ கார்சியா தீவின் அருகிலோ பறந்ததாக தகவல் இல்லை'' என்று மறுத்தார்.
ரஷியாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில் இந்த விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒரு செய்தி ஆரம்பத்திலிருந்தே உலா வருகிறது.
காந்தகாரில் உள்ளது
'மலேசிய விமானம் தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டது. அங்கு பயணிகள் அனைவரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர்.
ஹிட்ச் என்ற தீவிரவாதிதான் இந்த விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச் சென்றுள்ளார்.
இந்த விமானம் தற்போது பாகிஸ்தான் எல்லையில் காந்தகார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது', என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாதிர் குற்றச்சாட்டு
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு மாயமான விமானம் பற்றி தெரியும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதில் யாரோ எதையோ மறைக்கிறார்கள். ஏனென்றால் இதுபோன்ற ஓசையில்லாத வேலைகளை செய்ய அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு மட்டுமே தெரியும் என்று வலைத்தளம் ஒன்றில் அவர் கூறி உள்ளார்.