திருந்தாத மாலத்தீவு EX அமைச்சர்..இந்தியாவை சீண்டி மீண்டும் பதிவு!எதிர்ப்பு கிளம்பியதும் அந்தர் பல்டி
மாலே: இந்திய மூவர்ணக் கொடியை அவமதிக்கும் விதமாக பதிவிட்ட மாலத்தீவு முன்னாள் அமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது செயலுக்கு முன்னாள் அமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது. இந்திய பெருங்கடலில் அமைந்து இருக்கும் மாலத்தீவு பல தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய குட்டி நாடாகும். இந்தியாவுடன் ஒப்பிடும் போது மிக மிக குட்டி நாடாக இருக்கும் மாலத்தீவு, பூகோள ரீதியாக இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான நாடாக உள்ளது.

மாலத்தீவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகம்மது முய்சு வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்கள் மாலத்தீவில் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி, லட்சத்தீவு சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக அங்கு சென்று ஆழ்கடல் நீச்சலில் ஈடுபட்டு புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்தியா - மாலத்தீவு உறவு: மாலத்தீவை மிஞ்சும் அளவுக்கு லட்சத்தீவு அமைந்து இருப்பதால், இந்திய சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் விதமாக இருந்தது. சுற்றுலா வருவாயை அதிகம் நம்பியிருக்கும் மாலத்தீவு இதனால், எரிச்சல் அடைந்தது. மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் இந்திய பிரதமர் மோடி குறித்து இனவெறியுடன் சில கருத்துக்களை வெளியிட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதையடுத்து மூன்று பேரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.
எனினும், அப்போது முதலே மாலத்தீவுக்கும் இந்தியா இடையே அவ்வளவாக நல்லுறவு இல்லை. மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றவும் அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டார். மாலத்தீவு இப்படி முரண்டு பிடித்தாலும் இந்தியா அந்த நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
இந்திய மூவர்ணக் கொடியை அவமதித்து: இந்த நிலையில், தற்போது மாலத்தீவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 21 ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அனல் பறக்கும் பிரசாரம் இதற்காக நடைபெற்று வருகிறது. மாலத்தீவில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியான எம்டிபி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே, இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், அமைச்சரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியூனா ,மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்திய மூவர்ணக் கொடியை அவமதிக்கும் விதமாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியர்கள் கடும் விமர்சனம்: தற்போது அழிக்கப்பட்ட அந்த பதிவில், மூவரண கொடியில் இந்திய அசோக சக்கரம் நீக்கப்பட்டு அவரது கட்சியின் லோகோ இடம் பெற்று இருந்தது. இந்த பதிவு மூவர்ண கொடியை அவமதிக்கும் வகையில் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் பலரும் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: இதையடுத்து, தனது பதிவுக்கு மன்னிப்பு கேட்டு மாலத்தீவு முன்னாள் அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:- எனது சமீபத்திய பதிவுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்க்கட்சியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான் பதிவிட்ட ஒரு படம் இந்திய கொடியை போல இருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
உள்நோக்கத்துடன் நான் அவ்வாறு செயல்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதில் ஏதேனும் தவறான புரிதல் ஏற்பட்டு இருந்தால் நான் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனபதிவிட்டு இருக்கிறார். மேலும் இந்தியாவுடனான உறவை மாலத்தீவு மதிப்பதாகவும் தனது விளக்கத்தில் குறியுள்ளார்.












Click it and Unblock the Notifications